>

Monday, June 1, 2009

ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை


அரசியல் பொருளை மையமாக வைத்துக்கொண்டு எழுத வரும்போதெல்லாம் சில பொதுவான புத்திகள் தமிழ் எழுத்தாளப்பிதாமகர்களிடம் காணப்படுகிறது. இதை தொடர்ந்து அவதானிக்கையில் தாம் புரிபடும். நீங்கள் அவர்களுக்குப் பிரியமான வாசகராயிருப்பின் உங்களை ஒரு மயக்க நிலைக்குக் கொண்டு போய் வரலாறு, அரசியல் பற்றிய இதுவரை சமூகத்தில் வழங்கி வந்த, உங்கள் மீது திணிக்கப்பட்டுவந்த கட்டுமானங்கள் குலைந்து போய்விடாமல் இருப்பதற்கு எந்த அதிகாரத்தின் முன்னும் மண்டியிடுபவர்கள்.
நாம் பிதாமகர்களின் பொதுபுத்திக்கு வருவோம்.

இனப்பிரச்சனையோ சாதியப்பிரச்சனையோ பெண்ணியப்பிரச்சனையோ அது இறையாண்மையைக் குலைக்கும் தீங்கான வார்த்தைகள்.

இரண்டு வன்முறைக்கு எதிரான கருத்துக்களை அவர்கள் பேசும்போதும் மானுடத்தின் கருணை குறித்துப் பேசும்போதும் அவர்களுக்கு வன்முறை என்று புலப்படுவது துப்பாக்கி வடிவில் இயங்கும் ஆயுதங்கள் பற்றியது மட்டுமே. அதற்கான அவசியத்தை எழுப்பும் மனிதக்குரூரங்களைப் பற்றி அவர்கள் கேள்வியெழுப்பும் அறமோ அவசியமோ இல்லாதவர்கள்.

அடுத்து அவர்களுக்கு இந்தியாவின் சுதந்திரப்போரின் மீது உள்ள மோகம் என்பதும் காந்தியை ஒரு அகிம்சாவாதியாக மற்றுமே காணும் அந்த மயக்கநிலை, அவர்கள் சமூகத்தில் எந்த உழைப்பும் பிரயத்தனமுமின்றிப் பெறும் சமூக நிலை. அது சாதியாயிருக்கலாம். பால் நிலையாய் இருக்கலாம். பொருளாதார சொகுசாயிருக்கலாம். இயல்பாகவே இப்படிப்பெற்ற அந்தஸ்துகளைக்காப்பதற்கு ஆன்மீகம் கண்டிப்பாய் ஒரு பேசுபொருளாய் இருக்கவேண்டும் தானே? அகிம்சையின் முழுப்பரிமாணத்தையும் அறியாதவர்கள்.

மேலும் அவர்கள் எந்த ஒரு தீவிரமான விவாதத்தின் போதும் மௌனம் காப்பார்கள். அது ஒரு முடிவுக்கு வந்ததும்தான் தங்களை இனம் காட்டிக்கொள்வார்கள். ஏனெனில் அவர்களின் அகராதியில் இறையாண்மையின் பொருள் அதுவே. அதுமட்டுமன்றி ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசாமலிருப்பதே போதுமானது அதை இல்லாமல் ஆக்குவதற்கு. இது தமிழ் இலக்கியச்சூழலுக்கு புதிதுமன்று.

எப்பொழுதுமே அவர்கள் இந்தியர்கள். இந்திய மண்ணின் குடிமகன்களாயிருந்தாலும் தாம் சார்ந்திருக்கும் சமூகத்தினை அண்டிப்பிழைக்கும் பிழைப்பு வாதிகள்.
அறிவார்ந்த தளத்தில் இயங்கும் எழுத்தாளர்கள் அல்ல இந்தப் பிதாமகர்கள்.

தமிழகத்தில் தீவிர இலக்கிய வட்டத்திலிருந்து ஈழப்பிரச்சனையை வரலாற்றை முன்வைத்தும், அதன் பின்னணியில் இயங்கும் அரசியலை முன்வைத்தும் எழுதிய ஒரே படைப்பாளி பிரமிள். தன்னை தமிழ் இலக்கியத்தின் தீவிரமான தளத்துக்கு உந்தித்தள்ளும் எந்த ஒரு படைப்பாளிக்கும் பிரமிளின் எழுத்துலகத்தீவிரம் வாய்த்திருக்குமா என்பது ஐயமே. அதற்குக்காரணமாக இருப்பது எல்லோரும் சிந்தனைத்தளத்தில் இணைக்க மறந்த எல்கைகளை அவர் தொட்டதே. இன்றைய பிதாமகர்கள் நடுவாந்திர இலக்கியத்தகுதிக்கும் சிந்தனைக்கும் தங்களைப்போட்டி போட்டுக்கொண்டு பணயம் வைப்பது இனியும் ரகசியமல்ல.

***

’ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை’ - பிரமிள் என்ற பிருமிள் தர்மோத் ஜீவராமு அவர்களால் எழுதப்பட்டு 1984 டிசம்பரில் வெளியிடப்பட்டது. இதில் சிங்களர் மற்றும் தமிழரின் பூர்வீக வரலாற்றைத்துல்லியமாக வரைந்து செல்கிறார்.

இலங்கைத்தமிழர்க்கு சிங்களவர்களை விட அம்மண்ணில் பூர்வீக உரிமை உண்டு தொன்மையான சாட்சியங்கள் சார்ந்து நாம் இதை நிரூபிக்கலாம்.
இந்திய வம்சாவழித்தமிழர்கள் 1840க்கும் – 1850க்கும் இடையில் தென்னிந்தியாவிலிருந்து அடிமை முறையில் கடத்தப்பட்டவர்கள். இன்று பேச்சாயிருக்கும், போராயிருக்கும், இனப்படுகொலையாயிருக்கும் தனி ஈழம் என்பது ஒரு நாளில் எழுந்ததன்று. சிங்களவர்களால் தமிழர்கள் மீது செலுத்தப்பட்ட படிப்படியான அரசாங்க ஒடுக்குமுறைகள் தாம் அப்படி ஒரு குரலை எழும்பச்செய்ததும்.

இந்நிலையில் விடுதலைப்புலிகளின் போராட்டம் தோல்வியடைந்திருந்தாலும் ஈழப்போராட்டம் முற்றும் முடிந்ததாய் ஆகாது. ஏனெனில் அது வரலாற்றுத்தேவையாக இருந்து தான் இயக்கங்களாக வடிவெடுத்தது. ஆனால் தமிழர்கள் தமது வழக்கமான குணங்களால் அறிவு சார்ந்த தளத்துக்கு இப்பிரச்சனையை நகர்த்திச் செல்லாமல் விட்ட கொடுமையால் தான் இன்று அது போராக வளர்ந்தது. இதை தற்கால எழுத்தாளர் மற்றும் அறிவு ஜீவிகளின் பங்கேற்பிலிருந்தும் வெளிப்பாட்டிலிருந்தும் பங்களிப்பிலிருந்தும் நாம் நன்கு அறியலாம்.


பண்டைய வரலாற்றில் தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையிலான அரசியல் என்பது பலத்த புரிதல்களும் ஒப்பந்தங்களும் விட்டுக்கொடுத்தல்களும் தியாகங்களும் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. அவை இரு தரப்பிலும் இருந்ததற்கான காரணம், இரு இனத்திற்கிடையிலான புராதனக்கலப்பு, ஒருவருக்கொருவர் தங்கள் பலத்தை நிரூபிப்பதில் அறம் சார்ந்த உடன்படிக்கை, அரசியல் உதவிகள் எனத்தொடர்கின்றன.


அந்நூலில் சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையே இருப்பது இனப்பிரச்சனை அல்ல என்பதைத் தெளிவாகவே விளக்குகிறார். வரலாற்று மயக்கங்கள் இருப்பவர் கூட இதன் வழியாக உண்மையை உணரமுடியும். ஏனெனில் 1833ல் பிரிட்டாஷார் நுழைந்த பின்பு தான் தனித்தனியாக இருந்த சிங்களம் தமிழ் என்ற இரு அரசுகளும் பிரிட்டாஷாரின் ராஜீய ஆளுகைக்காக இணைக்கப்பட்டன. இதற்குப் பின்பு நடந்தது தான் தமிழகத்திலிருந்து மலையகத்துக்குச் செய்த ஜனக்கடத்தல். இன்று வரையிலும் இவர்களும் ஈழம் சார்ந்த விஷயத்திலும் பெரிய பங்கெடுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு ஒரு பெரிய சமூக ஒடுக்கு முறையை உணர்கின்றனர். இந்தக் கண்ணீர்க்கதையின் ஒரு பிரதிபலிப்பாக புதுமைப்பித்தனின் துண்பக்கேணியை எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் அவர் நூலை வாசித்த பிறகு முக்கியமான இலங்கையின் முக்கியமான அரசியல் நிகழ்வாக எனக்குத்தோன்றுவது 1948 பிரிட்டாஷாரிடமிருந்து விடுதலை பெற்ற இலங்கையில் நடந்த முதல் பொதுத்தேர்தல். பத்து இலட்சம் இந்திய வம்சத் தொழிலாளர்கள் பத்து இலட்சம் பேர் ஏழு பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்பியது தான். இதற்கிடையில் பிரிட்டாஷாரின் வரவால் நிகழ்ந்த வரலாற்றுப்பிழை தான் இன்று இவ்வளவு பெரிய அரசியல் பிழையை ஏற்படுத்தியுள்ளது. இதை பிரிட்டாஷார் இலங்கையில் இருக்கும் போது செயல்படுத்திய அரசியல் அமைப்பை மறுவாசிப்பு செய்து நுணுக்கங்களைப் புரிந்து கொள்வதன் மூலம் புரிந்து கொள்ளலாம். பிரிட்டாஷாரால் தமக்கு மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை நிறுவிக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இதை இந்திய வம்சாவழித்தமிழர்கள் எண்ணியிருக்கவேண்டும். அவர்களின் எழுச்சியைக்கண்டு சிங்களவர் அஞ்சினர். அதே சமயம் பிரிட்டாஷார் வரும்வரை வேறுவேறான அரசுகளாக இருந்து அந்த நிலத்தை ஆண்டுவந்த சிங்களவர்க்கும் தமிழர்க்கும் அவர்கள் இந்த நிலத்திலிருந்து விலகிய பின்பு ஏற்பட்ட ஆளுகைக்குழப்பங்கள் தாம் நீட்சிகள் தாம் இன்று வரையிலுமான உரிமைப்போர்.

இந்த இடத்தில் பிரமிள் சொல்வது, தொடரும் அரசியல் பிழைகளுக்குப்பொறுப்பேற்க வேண்டியது இலங்கைத்தமிழகத் தலைமை தாம். ஏனெனில் பிரச்சனையை அறிவு சார்ந்தும் யதார்த்தம் சார்ந்தும் அணுகாமல் வர்க்கப்பிரச்சனையாக ஒரு சந்தர்ப்பவாதமாக அப்பொழுது தமது மக்கள் மட்டுமே உரிமைகளைப்பெற்றால் போதுமென்றிருந்தது. இது சிங்களவர்க்கு இலங்கைத்தமிழக மக்கள் மீது இயல்பாகவே ஓர் இளக்கார நிலையை உருவாக்கியிருக்கவேண்டும். தொடர்ந்த அவர்களின் அரசியல் சூழ்ச்சிகளுக்கு ஏதுவாக இருந்திருக்கவேண்டும்.
சிங்களத் தலைமைகளுக்கிடையே இருந்த போட்டிகளினிடையே கிளப்பிவிடப்பட்டது தான் தமிழ்த்துவேஷம். இதை பெரிய தீயாக்கி அதில் தமிழர்களை இரையாக்கிக் குளிர் காய்ந்தனர் சிங்களத்தலைமைகளும் அப்பொழுது அவர்க்கு உடந்தையாக இருந்த தமிழ்த்தலைமைகளும். அவர்களும் அறியவில்லை; எப்படி அவர்களின் வம்சாவழியினர்க்கும் அடிப்படை உரிமைகள் காலங்காலமாய் அவர்களிடமிருந்து வேரறுக்கப்படும் என்பதை.
வன்முறையின் உச்சங்களையும் சூழ்ச்சியின் சூக்குமமான வடிவங்களையும் கையாளும் ஒடுக்குமுறை வடிவம், அதற்குத் தீர்வெடுக்கையில் கோருவதெல்லாம் அகிம்சா முறை. இது உலகெங்கிலும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருப்பது. ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் அகிம்சா முறையை மம்மி செய்யப்பட்ட ஒரு உடலாகவே காணத்தொடங்கிவிட்டனர். அது எப்போதும் தயாராக்கி வைக்கப்பட்ட ஒரு உணவுப்பொருள் போலவும் அது அவசியப்படும்போதெல்லாம் பசியை ஆற்றிக்கொள்ள உதவுவது போலவும். வன்முறைக்கு எதிரானதும் அல்ல அகிம்சை. அகிம்சை என்பது ஒரு நிரந்தரத்துவமான போராட்டத்துக்கு தன்னை தயார் செய்து கொள்வது. உடலையும் உயிரையும் பிரித்தறியாதது. இதையும் பிரமிள் இந்த நூலில் இலங்கை அரசியல் போராட்டத்துடன் இணைத்து விவாதிக்கிறார். அரசு செயல்பாட்டு மொழியாக சிங்களம் பயன்படுத்தப்பட்டது இத்தைகைய முதல் அரசியல் சூழ்ச்சியாகும்.

பல சமயங்களில் மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் ஒடுக்கப்படும்போதும் அதைப்பறிக்கும்போதும் அகிம்சை எனப்படும் அவர்களின் அர்த்தத்தில் அதாவது மௌனமாய் இருந்து பொறுத்துக்கொள்ளுங்கள் என்பதுதான் வன்முறையைப்பின்பற்றுவது. இது மறைமுகமாக மானுடம் மீது செலுத்தப்படும் வன்முறையை ஆதரிப்பது. மனதுக்குள்ளும் மூளைக்குள்ளும் சிந்தனைக்குள்ளும் வன்முறையை ஒளித்து வைத்து செயல்படுத்துவது.

மதங்களைப்பொறுத்த வரையில் இந்தியாவும் இலங்கையும் எதிரெதிர் திருகுவடிவங்களுடன் இயங்கக்கூடியன. இந்தியாவில் பௌத்தம் ஒடுக்கப்பட்டோரின் விடுதலை வழியாக இருக்கையில் இலங்கையில் அது ஒடுக்குவோரின் ஆதிக்க வழியாக இருக்கிறது. இதுவே மதம் எத்தகைய ஓர் அரசியல் இயந்திரம் என்பதை நேரடியாகவும் எளிதாகவும் விளங்கிக்கொள்ளப் போதுமானது. இவ்வாறு மொழி மட்டும் அல்லாமல் மதம் இனம் எனப் பிரிவினைகளுக்கான நெடுஞ்சாலைகள் பல கிளைகள் கொண்டு இயங்கும் மண் இலங்கை.

இந்நிலையில் இயக்கம் எனும் மக்கள் வடிவத்தை அதன் பண்பாடு, சமூகம், அரசியல், வரலாறு எனப் பன்முகப்புள்ளிகளோடு இணைத்துப்பார்க்காமல் தீர்வுகளும் அறிவுகளும் சொல்லும்போதெல்லாம் மிகப்பெரிய அரசியல் வீழ்ச்சிகளை தமிழ்ச்சமூகம் கண்டுகொண்டேயிருக்கிறது. அறிவு சார்ந்த தளத்துக்கு இப்பிரச்சனையை நகர்த்திச்செல்லாமல் மௌனமாகவோ அல்லது திசைதிருப்பவோ செய்வது மீண்டும் மீண்டும் ஒரு சமூகக்குற்றத்தை இழைப்பதற்கு ஒப்பானது. அது தமிழகத்தில் மிகச்சிறப்பாகவே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. நான் சொல்ல வருவதெல்லாம் தமிழ் ஈழம் என்பது தோல்வியடைந்த ஓர் அரசியல் வடிவம் என்றால் அதற்குக் காரணம், அதன் தீர்வுக்காக, அறிவு சான்றதொரு வழிக்கு நாம் நம்மை நகர்த்திச் செல்லாததும் தான்.

இதைத் தொடர்ந்து ஈழம் பற்றிய தமிழகத்தின் அரசியல் பார்வையையும் அதன் வெற்றிடங்களையும் வேறுவேறு புள்ளிகளில் இருந்து எழுதவும் விவாதிக்கவும் எண்ணியுள்ளேன்.


குட்டி ரேவதி

கமலா சுரையா – உடலுக்குள் ஆயுதம்



ஓர் ஆவணப்படத்திற்காக கமலா சுரையா அவர்களை சில தோழிகளுடன் சந்திக்கச் சென்றிருந்தேன். மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட அவருடைய படைப்புகளைப் படித்திருந்தேன். மூத்த படைப்பாளர்களைச் சந்திக்கும்போது ஏற்படும் ஏமாற்றங்கள் நமக்கே அவமானம் தருபவை. நாமும் அந்த வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதால். அந்த ஏமாற்றம் எனக்கு கமலாதாஸிடம் ஏற்படவேயில்லை. படைப்பாளிகளை நாம் அவர்கள் படைப்புகள் வழியாகவே அறிகிறோம். அப்பொழுதைய எனது எதிர்பார்ப்பைவிட அவர் அளப்பரிய ஆற்றலுடனும் பெருந்தன்மையுடனும் இருந்தார். ஆனால் தம்மை முழுமையான ஓர் மனித உயிரியாகவும் சுயதணிக்கையற்று எழுதும் படைப்பாளியாகவும் உணரும் பெண் எழுத்தாளர்கள் கடுமையாக விமர்சிக்கப்படும் நாடு இது என்பதால் கமலாதாஸும் இதற்குத் தப்பிக்கவில்லை.

அவர் தன்னை வாழ்க்கையின் விளையாட்டுக்கு முழுமையாக ஒப்புக்கொடுத்தவர் என்பதால் அவரைப்பார்த்து விமர்சித்தவர்களையெல்லாம் அவர் எளிதாகப் புறம்தள்ள முடிந்தது. அவருக்கு, அவரின் எழுத்தும் பரீட்சார்த்தங்களும் அழைத்துச்சென்ற வெளியை இன்னொரு பெண், விடுதலையுணர்வை நுகராத பெண் அனுபவிக்க முடியுமா என்பது கேள்வியே. சுயம் குறித்த கேள்விகள் அவருக்குத்தன் இருப்பு சார்ந்து எழுந்துகொண்டேயிருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் தனது வாழ்க்கையை இவ்வளவு பரிசோதனைகளுக்கு உட்படுத்தியிருக்க முடியாது. அவரின் மதமாற்றம் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் மதம் என்பது பெண்ணுக்கு எத்தகைய ஓர் உளவியல் சுமை என்பதை உணர அவர் எடுத்துக்கொண்ட பிரயத்தனமே அது. மேலும் அதன் வழியாக தன்னை, தனது அடையாளத்தை நிறுவுவதற்காக தொடர்ந்து ஆய்வு செய்துகொண்டேயிருந்தார். இந்தியாவை தனது நாடு என்று கொண்டாடுவோருக்கும் தான் ஒழுகி வந்த இந்து மதத்திலிருந்து ஒரு பெண் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்கும் தேவைப்படுவது ஒரே விதமான அரசியல் புரிதலே. மதம் என்பது உடலுக்குள் ஆயுதத்தை ஒளித்து வைத்துக்கொள்வது போன்றது.

தானே தன்னளவில் ஓர் இயக்கவாதியாக இருந்து காதல் என்பதன் அப்பழுக்கற்ற வெளிக்குப் பயணப்படத் துணிந்தார். மதத்திற்கும் பெண்ணுக்குமிடையிலான குறுகலான உறவுகளை முறியடிக்க விழைந்தார். ஆண்களின் சுயம் குறித்த அதிகார விழைவைப்போல பெண்ணின் சுயம் என்பதை அடையாளப்படுத்தும் முனைப்பை அவர் வாழ்க்கை முழுதுமாகக் கொண்டு, ஆனால் ஆண்கள் கையாளும் அந்த அதிகார வெறியைக் கையாள முடியாமல் சுயம் பற்றிய எள்ளலான ஓர் அபிப்ராயத்தை எல்லோருக்கும் கொடுத்தார். மற்ற படைப்பாளிகளைப் போல அவர் எதையுமே கடைசிவரை கற்பிக்கவோ வகுப்பெடுக்கவோ விரும்பவில்லை. மாறாக சுயக்கண்டுபிடிப்புகளுக்குக் கூட்டிச்செல்லும் பாதையாகவே எழுத்தை வைத்துக்கொண்டார்.

தனது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு நிலையில்லாமையைக் கொண்டிருந்தார். அது அவர் தன்னை எந்தச் சட்டகத்துக்குள்ளும் திணித்துக்கொள்ள முயலாமல் ஒரு பறவையாக இருக்க முயன்றதன் வெளிப்பாடே. பெண் உடலின் மீதான சமூக வெறுப்பைக் கொண்டாட்டமாகவும் அதே சமயம் அதை ஓர் எதிர்ப்பாகவும் மாற்றத்தெரிந்தவர். இந்தியப் பெண் படைப்பாளிகளுக்கு அவர் திறந்து கொடுத்த படைப்பு வெளிகள் பண்பாடும் அரசியல் துலக்கங்களும் உடையவை. முழுமையான ஒரு பெண்ணாகத் தன்னை அடையாளம் காண்பதில் அவர் கொண்ட களிப்பும் வெறியும் இலக்கில்லாததாக அவரை வைத்திருந்தது.

அன்றும் இன்றும் அவர் அனுபவித்தக் களிப்பைப் பார்த்துப் பொறாமை கொண்ட ஆண் படைப்பாளிகள் உண்டு. ஏற்கெனவே ஆயத்த வடிவில் இருக்கும் உலகம் ஆண்களுக்கானது என்பதை உணர்ந்திருக்க கமலா சுரையா உணர்ந்திருக்க வேண்டும். இல்லையென்றால் தான் வாழ்வதற்குத் தேவையான ஓர் உலகை தானே உருவாக்கிக்கொள்ள இவ்விதம் துணிந்திருக்கவே மாட்டார்.

குட்டி ரேவதி

Friday, May 22, 2009

குருவிகள் போயின போயின


அடர்ந்த கரும்புதருக்குள்ளிருந்து குருவிகள் பறந்துபோயின
அதிகாலை மின்னும் சிறகுகளுடனும் குறுந்தலைகளுடனும்

எனது தலையை அவற்றின் பறத்தலுக்காகத் திறந்து கொடுத்தேன்
ஒன்றாகி இரண்டாகி நூறாகி ஆயிரமாகிக் கலைந்தன

ஒடுங்கி வியர்த்திருந்த உடலும் சிறகுகளும் சுவாசிப்பதற்காக
விண்ணெங்கும் அலைந்து கொண்டேயிருந்தன ஒரே குருவியாகி

புதருக்கு அடியில் கும்மிருட்டு மூடிக்கொண்டிருந்தது இரத்தச்சகதியான
என் ஈரநிலத்தையும் பறக்கமுடியாத குஞ்சுகளையும்

ஊழியின் பெருவலி என்னகத்தே உள்ளது என்பதால் இன்னும் உறங்காமல் இருக்கின்றன குஞ்சுகளும் கனவுகளும் புதருக்குளே

குட்டி ரேவதி

Thursday, May 21, 2009

அரசியல் பிழை

வரலாறு எனும் சொல் கண்ணீர்த்துளிகளாக உதிர்ந்து வாடிக்கொண்டிருக்கிறது. வரலாற்றுக்கும் தான் வேறென்ன இலக்கு? இறந்த காலங்களின் வீதியில் நாயாய் அலையச்சொல்லும். பேய்களைக் கைப்பிடிக்கச்சொல்லும்.

ஆனால் மன்னவர்களே... நான் சொல்ல வந்தது அதுவன்று. இரத்தம் உலர்ந்த வரலாற்றுக் குறிப்புகளைப் பற்றியதுமல்ல. கொடிகள் படபடக்கும் வாகனங்களுடன் அலையும் அரசியலைப்பற்றியும் அவற்றின் மீது சவாரியாகும் பணமூட்டைகளைப் பற்றியும் தாம்.

ஒரு நினைவோ அல்லது நினைவுகளுக்கிடையே ஆவியாகும் நிகழ்வுகளோ சுவாரசியமாவதில்லை. வேகமெடுக்கும் மன்னர்களின் வெற்றிகள் தாம். மண்ணை முத்தமிடும், பெண்களைக் களவு கொள்ளும் மன்னர்கள் வரலாற்றுக்குப் புளித்துப்போனவர்கள். காதுக்குடைச்சல்கள்.

வரலாற்றோடு அடையாளப்படுத்திக்கொள்ள மண்ணை நக்கவும் தயாராகும் மன்னவர்களே இன்னும் இன்னும் புதுமையாக ஏதும் செய்யுங்கள். முத்தங்கள் கூட மின்னஞ்சலில் நீராவியைப்போல மறைந்து போகின்றன என்பதால் தீவிரமாக யோசித்தோ யோசிக்க சிரமமாயிருந்தால் சிந்தனையை இரவல் வாங்கியோ வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறுங்கள்.

செய்தித்தாள்களும் தொலைக்காட்சிப்பெட்டிகளும் உலகம் மொத்தத்திற்குமான திரைச்சீலையாகி உங்கள் முகம் முன்னே அலைபாயும். அவற்றில் உங்கள் முகம் எதிரொளித்து அடங்கும் வரை பேதலிப்பாய் கவனியுங்கள்.

வரலாற்றிலிருந்து திருடி தனது கதையென எழுதும் எழுத்தாளனை நானறிவேன். வரலாறு எனும் சொல் அவன் கண்ணில் நீலியின் கண்ணீர்த்துளிகள் போன்றவை. அதற்குமேல் அவன் தின்பதெல்லாம் மண்ணும் மண்ணில் புதைந்த அவன் மூதாதையர் என்புகளும்.


ஆகவே விரைவாக செய்யுங்கள்: பெண்களின் யோனியை மனிதர்களுக்கான மயானமாக்கிச் சாம்பல் பூசிக்கொள்ளலாம் அல்லது மனித உடலை நாயாகக் கற்பனை செய்து கோரப்படுத்தலாம். மரங்களுக்கு தீயின் வெயிலை உணவாக்கலாம்.

நண்பர்களிடம் உறக்கம் தொலைத்துப் பேசுங்கள். இப்படியேனும் நீங்கள் அரசியலை நெய்யவில்லையென்றால் வரலாற்றின் பக்கங்களில் உங்களுக்கு இடமிலாது போய்விடும். அரசியலின் பிழைகள்மீது வரலாறு வன்மம் கொள்ளாது. ஆகவே மன்னவர்களே...


குட்டி ரேவதி

Tuesday, May 5, 2009

வெகுமானம்

கவிதை எழுதுவதற்கும் அதை ஒரு தொடர் இலக்கியப்பயணமாக மாற்றிக்கொள்வதற்கும் பல தருணங்களில் எனக்கு உறுதுணையாக இருந்தது புஷ்கினின் ஒரு கவிதைப்பத்தி தான். தமிழகச்சூழலில் கவிஞர், அதிலும் ஒரு நவீனக் கவிஞர் எனப்படுபவர் பல தளங்களில் தன்னை தனது ஆளுமையை நிறுவ போராடவும் தொடர்ந்து உழைக்கவும் வேண்டியிருக்கிறது. அத்தகையதோர் இலக்கிய அரசியல் கட்டுமானம் தமிழகத்தில் நிலவிக்கொண்டிருக்கிறது. புஷ்கினின் வரிகள் இந்த அரசியலை எவ்வாறு தனி மனித அளவில் எதிர்கொள்ள வேண்டும் எனும் அறச்செயல்பாட்டை விளக்குவதாக உணர்கிறேன்.
”நீ ஒரு அரசன். தனிமையில் வாழ்ந்திரு
சுதந்திரமான பாதையில்
உனது தளையற்ற மனம்
எங்கே அழைத்துப்போகிறதோ அதைத் தொடர்ந்து போ
நேசிக்கப்பட்ட சிந்தனையின் கனிகளைக் கனியவிடு
நிறைவேற்றிய உன்னதச்செயல்களுக்கு வெகுமானம் கேட்காதே
வெகுமானங்கள் உன்னிடமே இருப்பவை
நீயே உனது உன்னத நீதிபதி
எவரும் துல்லியமாக உன் படைப்பைத் தீர்ப்பிடார் ஒருபோதும்
நுட்பமான கலைஞனே! உனக்கு அது சந்தோஷம்தானா?” எனும் புஷ்கினின் வரிகள் இன்று வரை என் கவிதை நெஞ்சிற்கு உரமாகவும் வெளிச்சமாகவும் இருந்து வருகின்றன. இவ்வரிகளை பத்து வருடங்களுக்கு முன்பு காஞ்சனை திரைப்பட இயக்கம் தனது ஓவியம் குறித்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் ஒன்றில் அச்சிட்டிருந்தது. இன்றும் இறைச்சிப் பொருளாய் உள்ளிறங்கி எனது நாடி நரம்புகளில் எல்லாம் ஊடுருவி ஒரு பாய்ச்சலையும் துணிவையும் தந்து கொண்டேயிருக்கின்றன அவ்வரிகள்.
தமிழ்ச்சூழல் முன்பினும் அதிகமாய் குழு மயமாகவும் கருத்தியல் வலு இழந்தும் போய்விட்டதை என்னால் நன்கு உணரமுடிகிறது. பத்து வருடங்களுக்கு முன்பாக கவிதைக்கும் எழுத்துக்கும் எழுத்தாளர்க்கும் இருந்த மரியாதையைக் கூட இப்பொழுது உணரமுடியவில்லை. எல்லா படைப்பாளிகளும் வாழ்வியல் போராட்டத்தை எதிர்கொள்ளும் துணிவையிழந்து கொண்டிருக்கின்றனர். இளம் படைப்பாளிகளுக்கு வழங்க இவர்களிடமோ இவர்களின் படைப்புகளிலோ ஒன்றுமில்லாமல் போய் ஒரு வெக்கை எங்கெங்கும் பரவியிருக்கிறது. தன்னை முன்னிறுத்தும் போரில் ஒருவரையொருவர் காலையிழுத்து வீழ்ந்து நகைக்க வைக்கும் நிகழ்வுகளுடன் தாம் வாழ்ந்தும் எழுதியும் கொண்டிருக்கும் மூத்த படிப்பாளிகள் நினைவில் உலவுகின்றனர். தமிழக அரசியல் திருப்பங்களை விட இலக்கியத்தளம் பல அதிர்ச்சியான திருப்புமுனைகளையும் வீழ்ச்சியையும் கண்டுள்ளதை எந்த ஒரு நேர்மையான அவதானிப்பும் சமூக அக்கறை உள்ள படைப்பாளியும் கண்டுகொள்ள முடியும்.
எந்த கருத்தியல் மலர்ச்சியும் சமீபத்தில் நிகழவில்லை. ஏற்கெனவே பொங்கியெழுந்த பெண்ணியத்தின் உடலரசியல் கருத்தியலும் தலித் பெண்ணியமும் அவற்றை விவாதித்து சிந்தனைத்தளத்தை விரிவுபடுத்தும் காழ்ப்புணர்வற்ற இலக்கிய விமர்சகர்களின்றி தேங்கிப்போய்விட்டது. எந்த ஒரு தீர்க்கமான பாதையும் அற்று பெண்ணியம் தடுமாறுவதை பெண்ணியவாதிகள் எனப்படுவோர் வேடிக்கைப்பார்த்து இருப்பதுடன் தாம் ஏற்கெனவே நிறுவிக்கொண்ட பெண்ணிய கொட்டிலுக்குத்தீனி போடுவதில் மும்முரமாக இருக்கின்றனர். அந்த வகையில் பெண்ணியம் என்பது குருடன் தடவிப்பார்த்து வருணித்த யானையைப்போலவே பிரமாண்டம் எடுத்துள்ளது.
இலக்கிய உலகின் நம்பகங்கள் பொய்யாகும் போதும், எழுத்துப்பயணத்தில் இடர்களைச் சந்திக்கும் போதும், நாம் விதந்தோதும் இலக்கிய ஆளுமைகள் அறம் மீறி அதிகாரத்தை நோக்கியும், அங்கீகாரத்தின் பொருட்டும் பயணப்படும்போதும் மேற்குறிப்பிட்ட புஷ்கினின் வரிகள் இருட்டில் விளக்குக்கம்பங்களாக உயர்ந்து நின்று வழிகாட்டிக்கொண்டேயிருக்கின்றன. இன்னும் இன்னும் அவற்றில் ஊற்றெடுக்கும் அறச்சிந்தனைகள் என்பவையும், அவ்வரிகளைக் கைகளில் கொண்டு பயணத்தைத்தொடரும் படைப்பாளி சந்திக்கும் தருணங்களையும் அவர் சேகரிக்கும் அனுபவங்களையும் பொறுத்தது. அங்கீகாரம் தேடும் கலைஞன் ஒருவன் எத்தகையதோர் அங்கீகாரத்தை அவன் ஏற்கவேண்டும் என்ற தெளிவையும் அதற்கான துணிவையும் வழங்குகிறது. இந்தக்குறிப்பிட்ட தருணத்தில் ’வெகுமானங்கள் உன்னிடமே இருப்பவை’ எனும் வரி எத்தகையதோர் இருளழிந்த பாதையை திறந்து கொடுக்கின்றது.
-குட்டி ரேவதி

Friday, April 24, 2009

பாசறை

அம்மாவின் விபத்து

அம்மாவுக்கு வலி மிகுதியாக இருந்தது. என் உடல் அவள் உடலுக்குள்ளிருந்து தான் வந்தது என்றாலும் அவள் வலியை என்னுடல் ஏற்றுக்கொள்ள முடியாதபடிக்கு வடிவமைக்கப்பட்டிருந்தது போலும். என் அண்ணன் இருகைகளாலும் விழுந்த இடத்திலிருந்து அவளைத்தூக்கி வந்து கிடத்தினான். அப்போதிருந்த வலியில் அம்மா சுருண்டு கிடந்ததில் அலுவல், நட்பு, கனவு, திரைப்படம் என தீஞ்சுவைகளால் பல கிளைகளுக்கும் திசை விரித்திருந்த என் உலகமே சுருண்டுவிட்டது. எனது ஆற்றாமையும் கோபமும் உச்சிவெயிலாய் என்னை எரிச்சலூட்டியது. ஆனால் அம்மாவின் உள்ளமும் தனது அறியாமையின் இருட்டை எங்கள் முன் பாதையாக்கியதில், சோர்ந்து போயிருந்தது. நாங்கள் ஐவருமே தயாரானோம். அவரை எழுந்து நடக்கச்செய்துவிட வேண்டுமென்ற உத்வேகத்தில் அவளின் வலியைப்பற்றி ஆராய்ந்தோம். அவளே தேடிக்கொண்ட வலியென்றாலும் அது அதே வழக்கமான கண்ணீருடனும் துடிப்பினுடனும் பரவிக்கொண்டிருந்தது. அவளைச்சுற்றிலும் எமது கண்ணீர்த்துளிகளை வாடாத பூக்களாய் இறைத்து வைத்தோம். அவை வாடும் போதெல்லாம் அவள் தனது கதைச்சுருளை வெளியிலெடுக்க அனுமதித்தோம். அக்கதைச்சுருளில் வார்த்தைகளால் எழுதப்படாத கதைகள் உணர்வின் தீரங்களாய் விரிந்து கிடந்தன. கொற்றவை பத்ரகாளி பற்றிய ஒரு கதை கற்பூரச் சுடராய் எழும்பியது அவள் கண்களில். அவள் நெஞ்சம் வலியால் பொதும்பிய ஒரு கனியாக இருப்பதை அம்மா எங்களுக்கு விளக்கினாள். ஆகவே தான் சிறிது வலியை அவளிடம் பகிர்ந்து கொண்டதாக எங்களுக்கு விளையாட்டு காட்டினாள். இந்தக்கதை அவளை குழந்தைகளுக்கான கற்பனை நரம்புகளுடையவளாக்கியது. கதைகளில் இரத்தம் சிந்தாத வலியும் எல்லைகளற்ற புனைவும் அறம் மீறாத பயணமும் நிறைந்திருக்கும். பேரக்குழந்தைகளுக்கு ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமுடைய கதைகளைத்தான் சொல்வாள். அவளுக்குத்தெரியும் குழந்தைகள் தாம் கேட்கும் கதை நேரத்தைவிட கற்பனைக்காலத்தைக் கூட்டிக்கொள்ளும் வலிவுடையன என்று. இவ்வாறு தனது வலியையெல்லாம் கதை நரம்புகளுக்குக்கடத்தி விபத்தின் விளைவை எளிதாக்கினாள். அந்த அறையின் குளிரூட்டியைப்போல அவளது கதைகள் குளிர்வித்து பல சமயங்களில் உறையச்செய்தன குழந்தைகளை. அம்மாவின் மெல்லிய ரோமங்கள் சிலிர்த்தெழுந்த போது குழந்தைகள் தமது பேரன்பால் அந்த ரோமங்களை நக்கின. அம்மாவின் பால்யத்திலிருந்து அக்குழந்தைகளின் பால்யம் நூற்றாண்டு தூரத்தில் இருந்தது. ஆகவேதான் கதைக்காலம் குறைந்து போயிருந்தது என நினைக்கிறேன்.

ஒரு பதிப்பாளரின் உரையாடல்

அவர் தனக்கு ஓய்விருக்கும்போதெல்லாம் தனது கைபேசியின் எண்களை அழுத்தி எதிரியின் நண்பர்களுக்குப் பேசுவார். ஊரடங்கியும் உறங்காத நண்பர்கள். எதிரிகள் என்று அவர் நினைப்பவர் கூட அவருடன் துறை சார்ந்தவரோ அல்லது வியாபாரம் சார்ந்தவரோ அல்ல. தனது மூளைக்குள் விஷநீர் ஊறச்செய்பவராயிருந்தால் போதுமானது. எதிரிகளைப்பல வருடங்கள் எதிர் நின்று கூட நோக்கியிருக்க மாட்டார். ஆனால் அவரது கண்கள் எதிரியின் புறங்கால்களில் நிலை குத்தியிருக்கும். பாம்பின் கால் பாம்பு அறியும். உரையாடலுக்கு வருவோம்:
‘என்னங்க... அது புழுத்துப்போன பெண்ணியம்!’
‘நல்ல வேள.. அப்படி அவங்களோட புக்க எதுவும் போட்டு நீங்க புண்ணியம் கட்டிக்கலையே.’ என்று நமது நண்பர் அவரை தனது பதிலால் மடக்குவதுடன் சம்பந்தமில்லாம அதெல்லாம் எதுக்கு நீங்க பேசுறீங்க என்னும் தொனியில்.
’சரியாச்சொன்னீங்க...ஆனா இது ஒரு அரிப்பா இருக்குங்க. அவளுங்க ஒரு நூறு பக்கம் எழுதினோன்ன புத்தகம் போட்டுடறாளூங்க. நம்ம பசங்க ஆயிரம் பக்கம் எழுதிக்கிட்டு பொழப்பு இல்லாம அலையுறாங்க.’
‘பொழப்பு இல்லாமலா எழுதுறாங்கங்கறீங்க. வன்மந்தான் வார்த்தையா ஊறுதுன்னு வச்சுக்குங்களேன். பொம்பளங்க வன்மத்த எப்படி வார்த்தையில காட்டுவாங்க. காட்டுனா உயிரோட இருக்க முடியுமா என்ன. புருஷங்காரன விடுங்க. இன்னொரு எழுத்தாளன பத்திக்கூட எழுத முடியாது.’
‘இவங்க வாழ்ற வாழ்க்கையெல்லாம் யாரால கிடைக்குது? ஒரு பொம்பள எழுத்துல கூட தத்துவ தரிசனம் இல்லையே? அப்புறம் பெண்ணியங்கிற வகையறாவே ஏதோ கெட்ட வார்த்த போல இருக்கு எனக்கு.’
‘ஏதாவது ஒரு படைப்பாளின்னு சொல்லாதீங்க. குறிப்பிட்டு யாரயாவது பேர் சொல்லி சொன்னீங்கன்னா புரிஞ்சுக்க வசதியா இருக்கும்’
‘எல்லாரையும் பத்திதான் சொல்றேன். இலக்கியத்துல பத்து வருஷத்த காலி பண்ணிட்டாங்க. இவங்களால ஒரு காலத்தோட இலக்கியப்போக்கே திசை திரும்பிடுச்சு.’
‘தீவிர இலக்கியத்தளத்தை நோக்கி கருத்தாக்கவியலை அவங்க திருப்ப முனஞ்சத தான சொல்றீங்க. என்னத்த சொல்றது... சிற்றிதழ்ங்கிற பேர்ல எல்லா இதழ்களும் நடுவாந்திரமான வேலைகளத்தான் செய்யுறாங்க. வியாபாரத்துக்கு வியாபாரமும் ஆச்சு. அரிப்புக்கு சொரிஞ்சுக்கிட்டதுமாச்சு. இல்லையா? என்னமோ அப்படி பாக்கையில இந்த பெண்கள் எழுதுறது மட்டும்தான் அந்த இலக்கியத்தீவிரத்த விட்டுடாம இருக்குதுன்னு நான் நெனக்கிறேன்.’
’ஆயிரம் பக்கம் எழுதுறவங்கள நடுவாந்திரமான எழுத்தாளர்னா சொல்றீங்க?’
‘ஆயிரம் பக்கம்னாலும் சொல்றதுல வியாபாரத்தனமான எழுத்தாளர்கள மிஞ்சிட்டாங்க. எனக்கென்னமோ ஜனரஞ்சக எழுத்தாளர்கள்கிட்ட இருக்குற நேர்மை கூட இவங்கக்கிட்ட இல்லை. இவங்கெல்லாம் தாங்கள ’சிந்திக்கிற மிஷின்’கிற நெனப்பத் தோல் உரிச்சுடலாமின்னு கேட்டுக்கிறேன்’
டொய்ங்... தொலைபேசி உரையாடல் துண்டிக்கப்பட்டது.

வரலாறும் பார்வையும்

வரலாறு என்பது ஆவண வடிவத்தில் நூற்களாக படிவங்களாக துருப்பிடித்த பொருட்களாக பாழடைந்த கோயில் சிற்பங்களாக உருக்கொண்டிருக்கின்றது இன்னும். இதை நாவலாக்குவது என்பது வெறுமனே அவற்றைத்தொகுப்பதில் தான் போய் முடிகிறது. நூல்கள் மியூசியங்களின் குறுக்கு இளைத்த வடிவம் என்றும் சொல்லலாம். வெறுமனே வரலாற்றின் ஆதிக்கத்தகவல்களைக் கட்டமைத்துப் புனைவதிலிருந்து வேறுபட்டதாய் நான் கண்டது ஜோ டீ குரூஸின் ஆழிசூல் உலகு மட்டுமே. ஆய்வும் வரலாறும் ஒடுக்கப்பட்டவர் மீதான அக்கறையும் இவரது படைப்பில் நேர்மையாக வெளிப்படுகிறது. அதற்குக் காரணம் அவரும் மீனவர் சமூகத்தைச்சார்ந்தவர் என்பது மட்டுமேயன்று. புனைவின் வெளிக்குள் வரலாற்றை சரடாய் நீளச்செய்கிறாரே அன்றி அதை ஓர் அதிகாரமாய் பயன்படுத்துவதில்லை. ஆக இன்றைக்குமான சமூகவெளிக்குள்ளும் வரலாற்றின் நீட்சிகளைக் கண்டுபிடிக்கமுடிகிறது, அவரால்.
இன்று ஆதிக்க அதிகாரத்தின் படிநிலைகள் மாறும்போது ஆதிக்க மக்களின் ஆவணப்படுத்தப்பட்ட போர்த்தகவல்களும் அடையாளங்களும் அவர்களின் பெருமிதங்களாக வலிந்து கொண்டாடப்படுகின்றன. தங்களின் வரலாற்றுப்பெருமிதங்களை மீண்டும் மீண்டும் நினைவு கூறும் விதமான புனைவுகளாக எழுதுகின்றனர். இதனால் வரலாற்றின் நிகழ்வுகள் காலத்தின் படிமங்களாக மாறாமல் நீர்த்துப்போகின்றன. மேலும் படைப்பு வெளியில் நிகழ்கால சம்பவங்களிலிருந்து விலக்கிக்கொள்ளும் உணர்வும் மேலோங்குகிறது.
நாவல் மரபினை தொடர்ந்து நோக்குகையில் விசித்திரமான உணர்வு பீடிக்கப்பட்டவர்களாய் இப்படைப்பாளிகள் மாறுவதும் கண்கூடானது. சிக்கலான பன்முனைப்போக்குகள் கொண்ட வரலாறு என்பது ஒரு காலகட்டத்தின் நிகழ்வுப்படுகை. மேலும் வரலாறு என்பது இறந்த காலத்தையே பெரும்பான்மையும் குறிப்பதால் அதை நிகழ்காலத்துடன் ஒப்பு நோக்காது அதை ஒரு செவ்வியல் வெளியாகக்காண்பது நாகரிக வளர்ச்சிக்கு எதிரானதாகவே கருதப்படும். வீணே பெருமை பேசித்திரிவதற்கு வரலாறு உதவாது. வரலாற்றை அப்படியே பதிவு செய்து விட்டு அதைப்புனைவு என்று கூறுவதும், அதன் திரிபுகளை செவ்வியலாக்குவதும் தமிழகத்தில் வழக்கில் இருக்கும் ஒன்றாக இருக்கிறது. இதற்கு மாறாக மரபின் பற்றுக்கொடியாக வரலாற்றை மாற்றும் முயற்சிக்கு நுண்மாண் நுழைபுலம் அதிகமாய் தேவைப்படுகிறது.

-குட்டி ரேவதி

Friday, April 17, 2009

கடிதக் காதை -01

அன்புள்ள வசந்திக்கு,

இந்தக் கடிதம் உன்னை சேருமாவென்று எனக்குத் தெரியவில்லை. நடுநிசியில் உறங்கந்தவறிய நட்சத்திரம் போல் நான் மட்டும் விழித்துகொண்டிருக்கிறேன். இந்தக்கடிதம் வழியாக உன்னைக் கண்டடைவது யதார்த்தமானதா என்றும் நானறியேன். இருட்டு தரும் அரவணைப்பைக் காதலன் கூடத்தரமுடியாது. தனிமையில் இருக்கும் பெண்ணிற்கு இருட்டும் உவப்பானதாகத்தான் இருக்கவேண்டும். இந்த இரவில் வார்த்தைகள் வழியாக உன்னைத்தொட இந்தக்கடிதம் இருக்கின்றது.

நானும் நீயும். உனக்கும் நினைவிருக்கலாம். சாலையோர மரங்களைப்போல நாம் வளர்ந்திருந்ததும் காட்சிப்பொருளாக மட்டுமே இருந்ததும் நமக்கு உவப்பில்லை. ஒரு விடுமுறை நாளில் சைக்கிளை மிதித்துக்கொண்டு தஞ்சாவூர் சாலையில் விரைய ஆரம்பித்தோம். நமது எவ்வளவு ஆற்றலை நாம் விட்டு விடுதலையான சிட்டுக்குருவிகளாக்கினோம், வசந்தி? சாலையோர மரங்கள் நம்மை முறைக்க ஆரம்பித்தன. அவற்றைக்கடந்தோம். செப்டம்பர் மாதம். வானத்தில் மேகங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. முப்பது கிலோமீட்டர் பயணத்துக்குப்பின் மூச்சிரைத்துக்களைப்பால் சோர்ந்து போய் ஒரு புல்வெளியில் விழுந்தோம். களைத்த உடலுக்குப் புல்வெளி பஞ்சுமெத்தை. வீடு திரும்புவதற்கான தூரம் குறித்த அச்சம் தார்ச்சாலையாய் ந்ம்முன்னே நீண்டு கருத்துக்கடந்தது. இப்படித்தான்....காதலும் உறவுகளும் தரும் தருணம் சார்ந்த வெளிகளைப்பிரவேசிக்கத்துணிந்து விட்டுப் பின் திரும்பவேண்டிய தூரம் குறித்த சோர்விலும் அச்சத்திலும் அங்கேயே தங்கிப்போய்விட்டோமென்று தோன்றுகிறது.

'நாம் ஒருத்தரையொருத்தர் பிரியாம இருக்க முடியாதா?’ என ஒருநாள் சிறு பிள்ளையைப்போல் கேட்டாய். எனக்கு இன்று நினைத்தாலும் சிரிப்பாக இருக்கிறது. 'நீ கல்யாணம் செஞ்சுக்காம இருந்தா யாரையும் பிரியாம இருக்கலாம். ஏன் ஒங்க அம்மா அப்பாவக்கூடபிரியாம இருக்கலாம்’. விளையாட்டாகத்தான் சொன்னேன். ஆனால் அடுத்த ஆறு மாதங்களில் நீ உங்கள் வீட்டின் கல்யாண ஏற்பாட்டால் கலவரமாகி அதில் இழுக்கப்பட்டு உன்னாலே உன்னை மீட்டெடுக்க முடியாத வாழ்க்கையில் கரைந்தே போனாய். உன்னைத்தொடர முடியாமல் நீ சென்ற பாதையில் முட்கள் அடர்ந்து வழியை அடைத்துக்கொண்டன.

எனக்கு இங்கே ஒவ்வொரு நாளும் வேறொரு நாளாகத்தான். இந்த நாள் கடந்த காலத்தின் எந்த நாளையும் நினைவுபடுத்தாமல் புதியதாய். அல்லது அவ்வாறு பழையதாகிப் போகும் நாட்களை விரட்டத்துணிந்து விட்டேன். காலம் என்பது சக்கரம் இல்லை. அது என்னைப் பொறுத்தவரை கருமையான பச்சைப்பாதங்களைக் கொப்பளிக்கச்செய்யும் மிரட்சியான தார்ச்சாலையின் வெளி. மருங்கில் நின்ற மரங்கள் மீது நான் மிகவும் இரக்கப்படுகிறேன். என்னவென்று சொல்லமுடியாத இரக்கவுணர்வு அவற்றின் மீது. ஒரு நெடுஞ்சாலை விபத்தைக்காண நேர்ந்த விதி அவற்றுக்குத்தான். நான் என்ன சொல்கிறேன் என்று உனக்குப்புரியும் வசந்தி! பலவிதமான இரவுகளை நான் கடந்து வந்திருக்கிறேன். அந்த இரவுகளின் மீது ஒரு நிலவைப்போல உன்னைக்காவல் வைத்திருக்கிறேன். அந்த இரவு தந்த சூன்யங்களும் அபூர்வங்களும் என்னை உன்னிடம் கொண்டுவந்து சேர்க்கும் என நம்பியிருக்கிறேன்.

இந்தத்தமிழகத்தில் குறைந்தது ஒரு இலட்சம் கிலோமீட்டரேனும் நான் பயணித்திருப்பேன். ஆய்வுகளுக்காக..ஆவரணப்படங்களுக்காக.. இயக்கப்பிரச்சாரங்களுக்காக...காதலர்களுடன்... தனிமையை ஒருங்கமைத்துக்கொள்ள...மேடைகளைச்சந்திப்பதற்காக... எத்தனைத்திருவிழாக்கள்...எத்தனை மலைகள்...எத்தனை காடுகள்... எந்த வெளியிலிருந்தும் அவ்வளவு ஆயிரம் கிலோமீட்டர் தூரமும் திரும்பவேண்டியிருந்தது. தொடங்கிய இடத்துக்கே திரும்பமுடிந்தது. அந்தப்பயணத்தில் எதையும் எதிர்பார்க்காமல். எல்லா பழங்கோயில்களும் தனது இருட்டிலும் பேரமைதியிலும் என்னை ஐக்கியப்படுத்திக்கொண்டன. ஆற்றுப்படுகைகளில் விழுந்த சூரியனிடம் நான் என்னை ரகசியப்படுத்திக்கொள்ளவில்லை. காதலர்களிடம் அறம் பற்றிப்பேசுவதை இலட்சியமாகக்கொண்டிருக்கவில்லை. அதற்குப்பின் நெடுஞ்சாலைகள் என் கனவின் அறைகளில் ஓடுவதைத் தவிர்க்கவே முடியவில்லை. ஆனால் எந்தப்பயணத்திலிருந்தும் நான் எனது வீடென்ற ஒன்றுக்கு என்னை மீட்டுக்கொண்டு வந்தேன்.

உறவுகளின் பாதைகள் தாம் சிக்கலாகி இருட்டுக்குள் நம்மைத் திணித்துவிட்டு கதவறைந்து மூடுகின்றன. உறவின் வெளிகளில் எவரும் குறுக்கிட்டு அதன் செம்பரப்பைச் சிதைத்துவிட முடிகிறது. ஒரு போர்க்களத்தை நிச்சயிக்கமுடிகிறது. கண்ணகிக்கும் கோவலனுக்கும் இடையில் மாதவி ஏன் புகுந்தாள் என்று கேட்டால் தற்செயலானது என்றோ அல்லது ஊழின் பெருவலி என்றோ சொல்வான் இளங்கோ. எனக்கு மனித மன ஓட்டங்கள் கொள்ளும் அரூபங்களாகவே இந்தக்கதாபாத்திரங்கள் தோன்றுகின்றன. இளங்கோ கில்லாடி தான். அவன் மனதின் தரிப்பை உரித்துஎடுத்தான் கதாபாத்திரங்களிலிருந்து. அவற்றை வைத்து ஒரு கதையை சொல்லி முடித்துவிட்டான். ஆனால் அந்தக்கதாபாத்திரங்கள் எல்லாமே இன்னும் உயிருடன் இருக்கின்றன. உறவின் வலையில் சிக்கிக்கொண்ட இளங்கோவை செரித்துவிடுகிறது வலிய ஒரு கதாபாத்திரம். இதைப்பற்றிப்பிறகு பேசலாம்!ஆனால் நான் எந்தக்காலத்தினிடையில் எந்தக்கதாபாத்திரமாக உருக்கொண்டிருக்கிறேன் என என்னையே அனுமானிக்க முயற்சி செய்து பார்க்கப்போகிறேன். அது ஒரு முடிவிலாத கனவுவெளிக்குள்ளோ வெட்டவெளிக்குள்ளோ என்னை ஒரு புனலைப்போல இழுத்துச்சென்றாலும் பரவாயில்லை என்று முடிவு செய்து விட்டேன்.

சமீபத்தில் நித்திலா என்றொரு தோழியைச்சந்தித்தேன். அவளின் கண்வெளிக்குள் பறவைகள் வானத்தில் பறப்பதைப்போல மிதக்கக் கண்டேன். அப்படி சொல்வது தான் பொருந்தும். ஆனால் அவள் ஆண்களை தன்னருகே அண்டவிட மாட்டாள். அதனால் தானோ கண்ணில் அந்தப்பறவைகளைப் பெற்றாள் என்று யோசிக்கவைத்தாள். விவாதங்களால் அவளைக்கடந்து செல்வது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. உனக்கும் அவளை அறிமுகப்படுத்தி வைப்பேன். புதியதாக ஒரு தோழி கிடைப்பதென்பது இன்னொரு வாழ்க்கை உனக்கு அறிமுகமாகப்போகிறது என்று தானே அர்த்தம்!

இம்மாநிலத்தின் நகரங்கள் எனக்கு மனப்பாடம். சிற்றூர்கள் எனக்கு வாய்ப்பாடு. முதுகெலும்பு முறிந்த சாலைகளுடைய கிராமங்களை உச்சிவேளையில் அடைந்து அங்கு வெப்பக்காற்றாக ஊதலுடன் அலையும் வெயிலை மோகினியாகக் கனவு கண்டு.....ஏன் கேட்கிறாய்...? அவை தரும் மனப்பித்தம் ஒரு கவிதைக்கும் ஒரு கோப்பை வோட்காவிற்கும் ஒருவன் என்மீது கிறுக்குப்பிடித்து தரும் முத்தத்திற்கும் நிகர். என்னைப்போல் ஊர்கள்மீது கிறுக்குப்பிடித்து அலையும் ஒருவரை இன்றுவரை நான் காணவில்லை.

ஒரு முறை அந்தத்தேரியில் எங்கெங்கும் கோடையின் சாமரம். என் நண்பர்களுடன் திரைப்படப்பிடிப்புக்காகச்சென்றிருந்தோம். வெட்டவெளி. செந்தரையும் கருமணலும் மாறிமாறி படிந்த நிலவெளி. துண்டுதுண்டாய் பானை ஓடுகள். சட்டென்று அது மூதாதையர் பூமி என்பது நினைவில் உறுத்த செருப்புகளுடன் கால் வைக்க நெருடலாய் இருந்தது. ஓரிடத்தைத்தேர்ந்தெடுத்து தோண்டினோம். பெரிய தாழி. உள்ளே பிரசவிக்கும் குழந்தைகளைப்போல சிறிய மண்குடுவைகள் ஒன்பது. வேலை முடிய ஓரிரவும் ஒரு பகலும் ஆனது. இரவினை பெளர்ணமி ஆண்டது. என்னுடன் வந்திருந்த இருபது பேரும் நானும் நிலவின் ஒளியைக்குடித்து குடித்துக் களிகொண்டோம். தூரத்தில் ஓலைகளுடன் பனைமரங்கள் பேய்களாய் மாறின. அப்படித்தான் இருக்க முடியும் பேய்கள். கட்டுக்கடங்காத பேய். உள்ளே சுழன்று கிளறும் அணங்கு. மன நடமாட்டமே ஒரு பேய்தான். இரவில் மணல் கொள்ளும் களிப்பு வெறியும் கட்டறுந்த உணர்வுகளும் தாம் பேய்களைப் படைக்கச் செய்கின்றன. உடல் தரையில் பாவாத உணர்வலையில் விழுந்த நாங்கள் பேய்களைப்படைத்து இரவை எங்களுக்குப் பழக்கிக் கொண்டோம்.

வெட்டவெளியை உடல் மோகித்துக்கொண்டேயிருக்கிறது. அது சிறைகளுக்கு மனித உடல்களுக்கு மனித மனங்களுக்குக் கட்டுண்டு கட்டுண்டு தீராத வாதையுடைய நாயைபோல ஆகிவிட்டது. அதை நான் மலையேற்றி பச்சைக்காற்றைச்சுவாசிக்கச்செய்தேன். இடைவிடாமல் நதியின் அடியில் கிடத்திப்பார்த்தேன். இது எவ்வளவு வருட உடல் நோய் என்று நான் எப்படி அறிவேன்? அருவியின் ஓலத்துடன் எனது வேண்டுதல்களைச்சமர்ப்பித்தேன். உடல் எனக்கு இசையத்தொடங்கியது. பயணங்கள் தொடர்கின்றன.

இங்கும் கோடை துவங்கிவிட்டது, வசந்தி. மரங்கள் பூக்களைக்கொண்டையாக்கி நிற்கின்றன. வியர்வை கசியும் எண்ணங்களுடன் மனிதர்கள் சாலைகளைப் புறக்கணிக்கிறார்கள். மாம்பழச்சுவை தான் எனக்கு கோடையை தொடங்கிவைக்கிறது. நிழல்கள் துல்லியமாக வீழூம் கோடையை நான் மிகவும் நேசிக்கிறேன். மரங்கள் தம் தொழிற்சாலையைத் துரிதப்படுத்துகின்றன. பார்வையை மறைக்கும் வெயிலால் பறவைகள் மெளனமாகின்றன. இந்தக்கோடை தரப்போகும் சம்பவங்களுக்காக நான் காத்திருக்கிறேன், வசந்தி.

குட்டி ரேவதி