>

Thursday, May 21, 2009

அரசியல் பிழை

வரலாறு எனும் சொல் கண்ணீர்த்துளிகளாக உதிர்ந்து வாடிக்கொண்டிருக்கிறது. வரலாற்றுக்கும் தான் வேறென்ன இலக்கு? இறந்த காலங்களின் வீதியில் நாயாய் அலையச்சொல்லும். பேய்களைக் கைப்பிடிக்கச்சொல்லும்.

ஆனால் மன்னவர்களே... நான் சொல்ல வந்தது அதுவன்று. இரத்தம் உலர்ந்த வரலாற்றுக் குறிப்புகளைப் பற்றியதுமல்ல. கொடிகள் படபடக்கும் வாகனங்களுடன் அலையும் அரசியலைப்பற்றியும் அவற்றின் மீது சவாரியாகும் பணமூட்டைகளைப் பற்றியும் தாம்.

ஒரு நினைவோ அல்லது நினைவுகளுக்கிடையே ஆவியாகும் நிகழ்வுகளோ சுவாரசியமாவதில்லை. வேகமெடுக்கும் மன்னர்களின் வெற்றிகள் தாம். மண்ணை முத்தமிடும், பெண்களைக் களவு கொள்ளும் மன்னர்கள் வரலாற்றுக்குப் புளித்துப்போனவர்கள். காதுக்குடைச்சல்கள்.

வரலாற்றோடு அடையாளப்படுத்திக்கொள்ள மண்ணை நக்கவும் தயாராகும் மன்னவர்களே இன்னும் இன்னும் புதுமையாக ஏதும் செய்யுங்கள். முத்தங்கள் கூட மின்னஞ்சலில் நீராவியைப்போல மறைந்து போகின்றன என்பதால் தீவிரமாக யோசித்தோ யோசிக்க சிரமமாயிருந்தால் சிந்தனையை இரவல் வாங்கியோ வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறுங்கள்.

செய்தித்தாள்களும் தொலைக்காட்சிப்பெட்டிகளும் உலகம் மொத்தத்திற்குமான திரைச்சீலையாகி உங்கள் முகம் முன்னே அலைபாயும். அவற்றில் உங்கள் முகம் எதிரொளித்து அடங்கும் வரை பேதலிப்பாய் கவனியுங்கள்.

வரலாற்றிலிருந்து திருடி தனது கதையென எழுதும் எழுத்தாளனை நானறிவேன். வரலாறு எனும் சொல் அவன் கண்ணில் நீலியின் கண்ணீர்த்துளிகள் போன்றவை. அதற்குமேல் அவன் தின்பதெல்லாம் மண்ணும் மண்ணில் புதைந்த அவன் மூதாதையர் என்புகளும்.


ஆகவே விரைவாக செய்யுங்கள்: பெண்களின் யோனியை மனிதர்களுக்கான மயானமாக்கிச் சாம்பல் பூசிக்கொள்ளலாம் அல்லது மனித உடலை நாயாகக் கற்பனை செய்து கோரப்படுத்தலாம். மரங்களுக்கு தீயின் வெயிலை உணவாக்கலாம்.

நண்பர்களிடம் உறக்கம் தொலைத்துப் பேசுங்கள். இப்படியேனும் நீங்கள் அரசியலை நெய்யவில்லையென்றால் வரலாற்றின் பக்கங்களில் உங்களுக்கு இடமிலாது போய்விடும். அரசியலின் பிழைகள்மீது வரலாறு வன்மம் கொள்ளாது. ஆகவே மன்னவர்களே...


குட்டி ரேவதி

No comments:

Post a Comment