>

Friday, April 24, 2009

பாசறை

அம்மாவின் விபத்து

அம்மாவுக்கு வலி மிகுதியாக இருந்தது. என் உடல் அவள் உடலுக்குள்ளிருந்து தான் வந்தது என்றாலும் அவள் வலியை என்னுடல் ஏற்றுக்கொள்ள முடியாதபடிக்கு வடிவமைக்கப்பட்டிருந்தது போலும். என் அண்ணன் இருகைகளாலும் விழுந்த இடத்திலிருந்து அவளைத்தூக்கி வந்து கிடத்தினான். அப்போதிருந்த வலியில் அம்மா சுருண்டு கிடந்ததில் அலுவல், நட்பு, கனவு, திரைப்படம் என தீஞ்சுவைகளால் பல கிளைகளுக்கும் திசை விரித்திருந்த என் உலகமே சுருண்டுவிட்டது. எனது ஆற்றாமையும் கோபமும் உச்சிவெயிலாய் என்னை எரிச்சலூட்டியது. ஆனால் அம்மாவின் உள்ளமும் தனது அறியாமையின் இருட்டை எங்கள் முன் பாதையாக்கியதில், சோர்ந்து போயிருந்தது. நாங்கள் ஐவருமே தயாரானோம். அவரை எழுந்து நடக்கச்செய்துவிட வேண்டுமென்ற உத்வேகத்தில் அவளின் வலியைப்பற்றி ஆராய்ந்தோம். அவளே தேடிக்கொண்ட வலியென்றாலும் அது அதே வழக்கமான கண்ணீருடனும் துடிப்பினுடனும் பரவிக்கொண்டிருந்தது. அவளைச்சுற்றிலும் எமது கண்ணீர்த்துளிகளை வாடாத பூக்களாய் இறைத்து வைத்தோம். அவை வாடும் போதெல்லாம் அவள் தனது கதைச்சுருளை வெளியிலெடுக்க அனுமதித்தோம். அக்கதைச்சுருளில் வார்த்தைகளால் எழுதப்படாத கதைகள் உணர்வின் தீரங்களாய் விரிந்து கிடந்தன. கொற்றவை பத்ரகாளி பற்றிய ஒரு கதை கற்பூரச் சுடராய் எழும்பியது அவள் கண்களில். அவள் நெஞ்சம் வலியால் பொதும்பிய ஒரு கனியாக இருப்பதை அம்மா எங்களுக்கு விளக்கினாள். ஆகவே தான் சிறிது வலியை அவளிடம் பகிர்ந்து கொண்டதாக எங்களுக்கு விளையாட்டு காட்டினாள். இந்தக்கதை அவளை குழந்தைகளுக்கான கற்பனை நரம்புகளுடையவளாக்கியது. கதைகளில் இரத்தம் சிந்தாத வலியும் எல்லைகளற்ற புனைவும் அறம் மீறாத பயணமும் நிறைந்திருக்கும். பேரக்குழந்தைகளுக்கு ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமுடைய கதைகளைத்தான் சொல்வாள். அவளுக்குத்தெரியும் குழந்தைகள் தாம் கேட்கும் கதை நேரத்தைவிட கற்பனைக்காலத்தைக் கூட்டிக்கொள்ளும் வலிவுடையன என்று. இவ்வாறு தனது வலியையெல்லாம் கதை நரம்புகளுக்குக்கடத்தி விபத்தின் விளைவை எளிதாக்கினாள். அந்த அறையின் குளிரூட்டியைப்போல அவளது கதைகள் குளிர்வித்து பல சமயங்களில் உறையச்செய்தன குழந்தைகளை. அம்மாவின் மெல்லிய ரோமங்கள் சிலிர்த்தெழுந்த போது குழந்தைகள் தமது பேரன்பால் அந்த ரோமங்களை நக்கின. அம்மாவின் பால்யத்திலிருந்து அக்குழந்தைகளின் பால்யம் நூற்றாண்டு தூரத்தில் இருந்தது. ஆகவேதான் கதைக்காலம் குறைந்து போயிருந்தது என நினைக்கிறேன்.

ஒரு பதிப்பாளரின் உரையாடல்

அவர் தனக்கு ஓய்விருக்கும்போதெல்லாம் தனது கைபேசியின் எண்களை அழுத்தி எதிரியின் நண்பர்களுக்குப் பேசுவார். ஊரடங்கியும் உறங்காத நண்பர்கள். எதிரிகள் என்று அவர் நினைப்பவர் கூட அவருடன் துறை சார்ந்தவரோ அல்லது வியாபாரம் சார்ந்தவரோ அல்ல. தனது மூளைக்குள் விஷநீர் ஊறச்செய்பவராயிருந்தால் போதுமானது. எதிரிகளைப்பல வருடங்கள் எதிர் நின்று கூட நோக்கியிருக்க மாட்டார். ஆனால் அவரது கண்கள் எதிரியின் புறங்கால்களில் நிலை குத்தியிருக்கும். பாம்பின் கால் பாம்பு அறியும். உரையாடலுக்கு வருவோம்:
‘என்னங்க... அது புழுத்துப்போன பெண்ணியம்!’
‘நல்ல வேள.. அப்படி அவங்களோட புக்க எதுவும் போட்டு நீங்க புண்ணியம் கட்டிக்கலையே.’ என்று நமது நண்பர் அவரை தனது பதிலால் மடக்குவதுடன் சம்பந்தமில்லாம அதெல்லாம் எதுக்கு நீங்க பேசுறீங்க என்னும் தொனியில்.
’சரியாச்சொன்னீங்க...ஆனா இது ஒரு அரிப்பா இருக்குங்க. அவளுங்க ஒரு நூறு பக்கம் எழுதினோன்ன புத்தகம் போட்டுடறாளூங்க. நம்ம பசங்க ஆயிரம் பக்கம் எழுதிக்கிட்டு பொழப்பு இல்லாம அலையுறாங்க.’
‘பொழப்பு இல்லாமலா எழுதுறாங்கங்கறீங்க. வன்மந்தான் வார்த்தையா ஊறுதுன்னு வச்சுக்குங்களேன். பொம்பளங்க வன்மத்த எப்படி வார்த்தையில காட்டுவாங்க. காட்டுனா உயிரோட இருக்க முடியுமா என்ன. புருஷங்காரன விடுங்க. இன்னொரு எழுத்தாளன பத்திக்கூட எழுத முடியாது.’
‘இவங்க வாழ்ற வாழ்க்கையெல்லாம் யாரால கிடைக்குது? ஒரு பொம்பள எழுத்துல கூட தத்துவ தரிசனம் இல்லையே? அப்புறம் பெண்ணியங்கிற வகையறாவே ஏதோ கெட்ட வார்த்த போல இருக்கு எனக்கு.’
‘ஏதாவது ஒரு படைப்பாளின்னு சொல்லாதீங்க. குறிப்பிட்டு யாரயாவது பேர் சொல்லி சொன்னீங்கன்னா புரிஞ்சுக்க வசதியா இருக்கும்’
‘எல்லாரையும் பத்திதான் சொல்றேன். இலக்கியத்துல பத்து வருஷத்த காலி பண்ணிட்டாங்க. இவங்களால ஒரு காலத்தோட இலக்கியப்போக்கே திசை திரும்பிடுச்சு.’
‘தீவிர இலக்கியத்தளத்தை நோக்கி கருத்தாக்கவியலை அவங்க திருப்ப முனஞ்சத தான சொல்றீங்க. என்னத்த சொல்றது... சிற்றிதழ்ங்கிற பேர்ல எல்லா இதழ்களும் நடுவாந்திரமான வேலைகளத்தான் செய்யுறாங்க. வியாபாரத்துக்கு வியாபாரமும் ஆச்சு. அரிப்புக்கு சொரிஞ்சுக்கிட்டதுமாச்சு. இல்லையா? என்னமோ அப்படி பாக்கையில இந்த பெண்கள் எழுதுறது மட்டும்தான் அந்த இலக்கியத்தீவிரத்த விட்டுடாம இருக்குதுன்னு நான் நெனக்கிறேன்.’
’ஆயிரம் பக்கம் எழுதுறவங்கள நடுவாந்திரமான எழுத்தாளர்னா சொல்றீங்க?’
‘ஆயிரம் பக்கம்னாலும் சொல்றதுல வியாபாரத்தனமான எழுத்தாளர்கள மிஞ்சிட்டாங்க. எனக்கென்னமோ ஜனரஞ்சக எழுத்தாளர்கள்கிட்ட இருக்குற நேர்மை கூட இவங்கக்கிட்ட இல்லை. இவங்கெல்லாம் தாங்கள ’சிந்திக்கிற மிஷின்’கிற நெனப்பத் தோல் உரிச்சுடலாமின்னு கேட்டுக்கிறேன்’
டொய்ங்... தொலைபேசி உரையாடல் துண்டிக்கப்பட்டது.

வரலாறும் பார்வையும்

வரலாறு என்பது ஆவண வடிவத்தில் நூற்களாக படிவங்களாக துருப்பிடித்த பொருட்களாக பாழடைந்த கோயில் சிற்பங்களாக உருக்கொண்டிருக்கின்றது இன்னும். இதை நாவலாக்குவது என்பது வெறுமனே அவற்றைத்தொகுப்பதில் தான் போய் முடிகிறது. நூல்கள் மியூசியங்களின் குறுக்கு இளைத்த வடிவம் என்றும் சொல்லலாம். வெறுமனே வரலாற்றின் ஆதிக்கத்தகவல்களைக் கட்டமைத்துப் புனைவதிலிருந்து வேறுபட்டதாய் நான் கண்டது ஜோ டீ குரூஸின் ஆழிசூல் உலகு மட்டுமே. ஆய்வும் வரலாறும் ஒடுக்கப்பட்டவர் மீதான அக்கறையும் இவரது படைப்பில் நேர்மையாக வெளிப்படுகிறது. அதற்குக் காரணம் அவரும் மீனவர் சமூகத்தைச்சார்ந்தவர் என்பது மட்டுமேயன்று. புனைவின் வெளிக்குள் வரலாற்றை சரடாய் நீளச்செய்கிறாரே அன்றி அதை ஓர் அதிகாரமாய் பயன்படுத்துவதில்லை. ஆக இன்றைக்குமான சமூகவெளிக்குள்ளும் வரலாற்றின் நீட்சிகளைக் கண்டுபிடிக்கமுடிகிறது, அவரால்.
இன்று ஆதிக்க அதிகாரத்தின் படிநிலைகள் மாறும்போது ஆதிக்க மக்களின் ஆவணப்படுத்தப்பட்ட போர்த்தகவல்களும் அடையாளங்களும் அவர்களின் பெருமிதங்களாக வலிந்து கொண்டாடப்படுகின்றன. தங்களின் வரலாற்றுப்பெருமிதங்களை மீண்டும் மீண்டும் நினைவு கூறும் விதமான புனைவுகளாக எழுதுகின்றனர். இதனால் வரலாற்றின் நிகழ்வுகள் காலத்தின் படிமங்களாக மாறாமல் நீர்த்துப்போகின்றன. மேலும் படைப்பு வெளியில் நிகழ்கால சம்பவங்களிலிருந்து விலக்கிக்கொள்ளும் உணர்வும் மேலோங்குகிறது.
நாவல் மரபினை தொடர்ந்து நோக்குகையில் விசித்திரமான உணர்வு பீடிக்கப்பட்டவர்களாய் இப்படைப்பாளிகள் மாறுவதும் கண்கூடானது. சிக்கலான பன்முனைப்போக்குகள் கொண்ட வரலாறு என்பது ஒரு காலகட்டத்தின் நிகழ்வுப்படுகை. மேலும் வரலாறு என்பது இறந்த காலத்தையே பெரும்பான்மையும் குறிப்பதால் அதை நிகழ்காலத்துடன் ஒப்பு நோக்காது அதை ஒரு செவ்வியல் வெளியாகக்காண்பது நாகரிக வளர்ச்சிக்கு எதிரானதாகவே கருதப்படும். வீணே பெருமை பேசித்திரிவதற்கு வரலாறு உதவாது. வரலாற்றை அப்படியே பதிவு செய்து விட்டு அதைப்புனைவு என்று கூறுவதும், அதன் திரிபுகளை செவ்வியலாக்குவதும் தமிழகத்தில் வழக்கில் இருக்கும் ஒன்றாக இருக்கிறது. இதற்கு மாறாக மரபின் பற்றுக்கொடியாக வரலாற்றை மாற்றும் முயற்சிக்கு நுண்மாண் நுழைபுலம் அதிகமாய் தேவைப்படுகிறது.

-குட்டி ரேவதி

Friday, April 17, 2009

கடிதக் காதை -01

அன்புள்ள வசந்திக்கு,

இந்தக் கடிதம் உன்னை சேருமாவென்று எனக்குத் தெரியவில்லை. நடுநிசியில் உறங்கந்தவறிய நட்சத்திரம் போல் நான் மட்டும் விழித்துகொண்டிருக்கிறேன். இந்தக்கடிதம் வழியாக உன்னைக் கண்டடைவது யதார்த்தமானதா என்றும் நானறியேன். இருட்டு தரும் அரவணைப்பைக் காதலன் கூடத்தரமுடியாது. தனிமையில் இருக்கும் பெண்ணிற்கு இருட்டும் உவப்பானதாகத்தான் இருக்கவேண்டும். இந்த இரவில் வார்த்தைகள் வழியாக உன்னைத்தொட இந்தக்கடிதம் இருக்கின்றது.

நானும் நீயும். உனக்கும் நினைவிருக்கலாம். சாலையோர மரங்களைப்போல நாம் வளர்ந்திருந்ததும் காட்சிப்பொருளாக மட்டுமே இருந்ததும் நமக்கு உவப்பில்லை. ஒரு விடுமுறை நாளில் சைக்கிளை மிதித்துக்கொண்டு தஞ்சாவூர் சாலையில் விரைய ஆரம்பித்தோம். நமது எவ்வளவு ஆற்றலை நாம் விட்டு விடுதலையான சிட்டுக்குருவிகளாக்கினோம், வசந்தி? சாலையோர மரங்கள் நம்மை முறைக்க ஆரம்பித்தன. அவற்றைக்கடந்தோம். செப்டம்பர் மாதம். வானத்தில் மேகங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. முப்பது கிலோமீட்டர் பயணத்துக்குப்பின் மூச்சிரைத்துக்களைப்பால் சோர்ந்து போய் ஒரு புல்வெளியில் விழுந்தோம். களைத்த உடலுக்குப் புல்வெளி பஞ்சுமெத்தை. வீடு திரும்புவதற்கான தூரம் குறித்த அச்சம் தார்ச்சாலையாய் ந்ம்முன்னே நீண்டு கருத்துக்கடந்தது. இப்படித்தான்....காதலும் உறவுகளும் தரும் தருணம் சார்ந்த வெளிகளைப்பிரவேசிக்கத்துணிந்து விட்டுப் பின் திரும்பவேண்டிய தூரம் குறித்த சோர்விலும் அச்சத்திலும் அங்கேயே தங்கிப்போய்விட்டோமென்று தோன்றுகிறது.

'நாம் ஒருத்தரையொருத்தர் பிரியாம இருக்க முடியாதா?’ என ஒருநாள் சிறு பிள்ளையைப்போல் கேட்டாய். எனக்கு இன்று நினைத்தாலும் சிரிப்பாக இருக்கிறது. 'நீ கல்யாணம் செஞ்சுக்காம இருந்தா யாரையும் பிரியாம இருக்கலாம். ஏன் ஒங்க அம்மா அப்பாவக்கூடபிரியாம இருக்கலாம்’. விளையாட்டாகத்தான் சொன்னேன். ஆனால் அடுத்த ஆறு மாதங்களில் நீ உங்கள் வீட்டின் கல்யாண ஏற்பாட்டால் கலவரமாகி அதில் இழுக்கப்பட்டு உன்னாலே உன்னை மீட்டெடுக்க முடியாத வாழ்க்கையில் கரைந்தே போனாய். உன்னைத்தொடர முடியாமல் நீ சென்ற பாதையில் முட்கள் அடர்ந்து வழியை அடைத்துக்கொண்டன.

எனக்கு இங்கே ஒவ்வொரு நாளும் வேறொரு நாளாகத்தான். இந்த நாள் கடந்த காலத்தின் எந்த நாளையும் நினைவுபடுத்தாமல் புதியதாய். அல்லது அவ்வாறு பழையதாகிப் போகும் நாட்களை விரட்டத்துணிந்து விட்டேன். காலம் என்பது சக்கரம் இல்லை. அது என்னைப் பொறுத்தவரை கருமையான பச்சைப்பாதங்களைக் கொப்பளிக்கச்செய்யும் மிரட்சியான தார்ச்சாலையின் வெளி. மருங்கில் நின்ற மரங்கள் மீது நான் மிகவும் இரக்கப்படுகிறேன். என்னவென்று சொல்லமுடியாத இரக்கவுணர்வு அவற்றின் மீது. ஒரு நெடுஞ்சாலை விபத்தைக்காண நேர்ந்த விதி அவற்றுக்குத்தான். நான் என்ன சொல்கிறேன் என்று உனக்குப்புரியும் வசந்தி! பலவிதமான இரவுகளை நான் கடந்து வந்திருக்கிறேன். அந்த இரவுகளின் மீது ஒரு நிலவைப்போல உன்னைக்காவல் வைத்திருக்கிறேன். அந்த இரவு தந்த சூன்யங்களும் அபூர்வங்களும் என்னை உன்னிடம் கொண்டுவந்து சேர்க்கும் என நம்பியிருக்கிறேன்.

இந்தத்தமிழகத்தில் குறைந்தது ஒரு இலட்சம் கிலோமீட்டரேனும் நான் பயணித்திருப்பேன். ஆய்வுகளுக்காக..ஆவரணப்படங்களுக்காக.. இயக்கப்பிரச்சாரங்களுக்காக...காதலர்களுடன்... தனிமையை ஒருங்கமைத்துக்கொள்ள...மேடைகளைச்சந்திப்பதற்காக... எத்தனைத்திருவிழாக்கள்...எத்தனை மலைகள்...எத்தனை காடுகள்... எந்த வெளியிலிருந்தும் அவ்வளவு ஆயிரம் கிலோமீட்டர் தூரமும் திரும்பவேண்டியிருந்தது. தொடங்கிய இடத்துக்கே திரும்பமுடிந்தது. அந்தப்பயணத்தில் எதையும் எதிர்பார்க்காமல். எல்லா பழங்கோயில்களும் தனது இருட்டிலும் பேரமைதியிலும் என்னை ஐக்கியப்படுத்திக்கொண்டன. ஆற்றுப்படுகைகளில் விழுந்த சூரியனிடம் நான் என்னை ரகசியப்படுத்திக்கொள்ளவில்லை. காதலர்களிடம் அறம் பற்றிப்பேசுவதை இலட்சியமாகக்கொண்டிருக்கவில்லை. அதற்குப்பின் நெடுஞ்சாலைகள் என் கனவின் அறைகளில் ஓடுவதைத் தவிர்க்கவே முடியவில்லை. ஆனால் எந்தப்பயணத்திலிருந்தும் நான் எனது வீடென்ற ஒன்றுக்கு என்னை மீட்டுக்கொண்டு வந்தேன்.

உறவுகளின் பாதைகள் தாம் சிக்கலாகி இருட்டுக்குள் நம்மைத் திணித்துவிட்டு கதவறைந்து மூடுகின்றன. உறவின் வெளிகளில் எவரும் குறுக்கிட்டு அதன் செம்பரப்பைச் சிதைத்துவிட முடிகிறது. ஒரு போர்க்களத்தை நிச்சயிக்கமுடிகிறது. கண்ணகிக்கும் கோவலனுக்கும் இடையில் மாதவி ஏன் புகுந்தாள் என்று கேட்டால் தற்செயலானது என்றோ அல்லது ஊழின் பெருவலி என்றோ சொல்வான் இளங்கோ. எனக்கு மனித மன ஓட்டங்கள் கொள்ளும் அரூபங்களாகவே இந்தக்கதாபாத்திரங்கள் தோன்றுகின்றன. இளங்கோ கில்லாடி தான். அவன் மனதின் தரிப்பை உரித்துஎடுத்தான் கதாபாத்திரங்களிலிருந்து. அவற்றை வைத்து ஒரு கதையை சொல்லி முடித்துவிட்டான். ஆனால் அந்தக்கதாபாத்திரங்கள் எல்லாமே இன்னும் உயிருடன் இருக்கின்றன. உறவின் வலையில் சிக்கிக்கொண்ட இளங்கோவை செரித்துவிடுகிறது வலிய ஒரு கதாபாத்திரம். இதைப்பற்றிப்பிறகு பேசலாம்!ஆனால் நான் எந்தக்காலத்தினிடையில் எந்தக்கதாபாத்திரமாக உருக்கொண்டிருக்கிறேன் என என்னையே அனுமானிக்க முயற்சி செய்து பார்க்கப்போகிறேன். அது ஒரு முடிவிலாத கனவுவெளிக்குள்ளோ வெட்டவெளிக்குள்ளோ என்னை ஒரு புனலைப்போல இழுத்துச்சென்றாலும் பரவாயில்லை என்று முடிவு செய்து விட்டேன்.

சமீபத்தில் நித்திலா என்றொரு தோழியைச்சந்தித்தேன். அவளின் கண்வெளிக்குள் பறவைகள் வானத்தில் பறப்பதைப்போல மிதக்கக் கண்டேன். அப்படி சொல்வது தான் பொருந்தும். ஆனால் அவள் ஆண்களை தன்னருகே அண்டவிட மாட்டாள். அதனால் தானோ கண்ணில் அந்தப்பறவைகளைப் பெற்றாள் என்று யோசிக்கவைத்தாள். விவாதங்களால் அவளைக்கடந்து செல்வது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. உனக்கும் அவளை அறிமுகப்படுத்தி வைப்பேன். புதியதாக ஒரு தோழி கிடைப்பதென்பது இன்னொரு வாழ்க்கை உனக்கு அறிமுகமாகப்போகிறது என்று தானே அர்த்தம்!

இம்மாநிலத்தின் நகரங்கள் எனக்கு மனப்பாடம். சிற்றூர்கள் எனக்கு வாய்ப்பாடு. முதுகெலும்பு முறிந்த சாலைகளுடைய கிராமங்களை உச்சிவேளையில் அடைந்து அங்கு வெப்பக்காற்றாக ஊதலுடன் அலையும் வெயிலை மோகினியாகக் கனவு கண்டு.....ஏன் கேட்கிறாய்...? அவை தரும் மனப்பித்தம் ஒரு கவிதைக்கும் ஒரு கோப்பை வோட்காவிற்கும் ஒருவன் என்மீது கிறுக்குப்பிடித்து தரும் முத்தத்திற்கும் நிகர். என்னைப்போல் ஊர்கள்மீது கிறுக்குப்பிடித்து அலையும் ஒருவரை இன்றுவரை நான் காணவில்லை.

ஒரு முறை அந்தத்தேரியில் எங்கெங்கும் கோடையின் சாமரம். என் நண்பர்களுடன் திரைப்படப்பிடிப்புக்காகச்சென்றிருந்தோம். வெட்டவெளி. செந்தரையும் கருமணலும் மாறிமாறி படிந்த நிலவெளி. துண்டுதுண்டாய் பானை ஓடுகள். சட்டென்று அது மூதாதையர் பூமி என்பது நினைவில் உறுத்த செருப்புகளுடன் கால் வைக்க நெருடலாய் இருந்தது. ஓரிடத்தைத்தேர்ந்தெடுத்து தோண்டினோம். பெரிய தாழி. உள்ளே பிரசவிக்கும் குழந்தைகளைப்போல சிறிய மண்குடுவைகள் ஒன்பது. வேலை முடிய ஓரிரவும் ஒரு பகலும் ஆனது. இரவினை பெளர்ணமி ஆண்டது. என்னுடன் வந்திருந்த இருபது பேரும் நானும் நிலவின் ஒளியைக்குடித்து குடித்துக் களிகொண்டோம். தூரத்தில் ஓலைகளுடன் பனைமரங்கள் பேய்களாய் மாறின. அப்படித்தான் இருக்க முடியும் பேய்கள். கட்டுக்கடங்காத பேய். உள்ளே சுழன்று கிளறும் அணங்கு. மன நடமாட்டமே ஒரு பேய்தான். இரவில் மணல் கொள்ளும் களிப்பு வெறியும் கட்டறுந்த உணர்வுகளும் தாம் பேய்களைப் படைக்கச் செய்கின்றன. உடல் தரையில் பாவாத உணர்வலையில் விழுந்த நாங்கள் பேய்களைப்படைத்து இரவை எங்களுக்குப் பழக்கிக் கொண்டோம்.

வெட்டவெளியை உடல் மோகித்துக்கொண்டேயிருக்கிறது. அது சிறைகளுக்கு மனித உடல்களுக்கு மனித மனங்களுக்குக் கட்டுண்டு கட்டுண்டு தீராத வாதையுடைய நாயைபோல ஆகிவிட்டது. அதை நான் மலையேற்றி பச்சைக்காற்றைச்சுவாசிக்கச்செய்தேன். இடைவிடாமல் நதியின் அடியில் கிடத்திப்பார்த்தேன். இது எவ்வளவு வருட உடல் நோய் என்று நான் எப்படி அறிவேன்? அருவியின் ஓலத்துடன் எனது வேண்டுதல்களைச்சமர்ப்பித்தேன். உடல் எனக்கு இசையத்தொடங்கியது. பயணங்கள் தொடர்கின்றன.

இங்கும் கோடை துவங்கிவிட்டது, வசந்தி. மரங்கள் பூக்களைக்கொண்டையாக்கி நிற்கின்றன. வியர்வை கசியும் எண்ணங்களுடன் மனிதர்கள் சாலைகளைப் புறக்கணிக்கிறார்கள். மாம்பழச்சுவை தான் எனக்கு கோடையை தொடங்கிவைக்கிறது. நிழல்கள் துல்லியமாக வீழூம் கோடையை நான் மிகவும் நேசிக்கிறேன். மரங்கள் தம் தொழிற்சாலையைத் துரிதப்படுத்துகின்றன. பார்வையை மறைக்கும் வெயிலால் பறவைகள் மெளனமாகின்றன. இந்தக்கோடை தரப்போகும் சம்பவங்களுக்காக நான் காத்திருக்கிறேன், வசந்தி.

குட்டி ரேவதி

Thursday, April 16, 2009

புரிந்துகொள்ள முடியவில்லை

சில சமயங்களில், வலைப்பூ பட்டறைகளுக்குப் போயிருக்கலாமே என்று வருத்தப்படும்படியாக ஏதாவது நடந்துவிடுகிறது. நானும் கவிஞர் குட்டி ரேவதியும் இணைந்து ஒரு வலைப்பூவை ஆரம்பித்தோம். அதில் பதிவுகளை இட்டோம். தமிழ்மணத்திற்கு இணைப்பு கொடுக்கவும் செய்தோம். அதென்னவோ தெரியவில்லை... தமிழ்மண முகப்பில் சிறிது நேரமே பதிவு தெரிந்தது. பிறகு மறைந்தே போயிற்று. என்னவாயிற்று என்றே தெரியவில்லை. தவிர, கடைசியாக இட்ட இடுகை மட்டுமே தமிழ்மணத்தில் தெரிகிறது. ஏனையவைகளுக்கு கருவிப்பட்டையில் 'அனுப்பு'என்பதையே காணவில்லை. எங்கேயென்று அனுப்புவது:( என்னமோ ஒன்றும் புரியவில்லை. இந்தப் பதிவைக்கூட ஒரு பரீட்சார்த்தமாகவே இட்டுப்பார்க்கிறேன். வாங்க. ... வந்து ஏதாவது வழி சொல்லிவிட்டுப் போங்க.

-தமி்ழ்நதி

நாவல் போல எழுதிக்கொண்டிருக்கும் வடிவத்தின் ஒரு பகுதி

இன்று அதிகாலையிலேயே உறக்கம் கலைந்துவிட்டது. உன்னோடு பேசவேண்டுமென்ற நினைப்புடன்தான் கண்விழித்தேன். ஊட்டியின் குளிர் எழுந்திருக்கவிடாமல் இழுத்து இழுத்துப் பிடிக்கிறது. நீண்ட நேரம் அந்தக் கதகதப்பினுள் அமிழ்ந்து கிடந்தேன். தற்காலிகமாக அருளப்பட்ட சுகத்தை துளி சிந்தாமல் துய்த்துவிடும் வேட்கை. அடுத்து என்ன… மணி அடித்தால் சாப்பாடு, எழுத்து, உறக்கம், சிந்தனை, தனிமை… ஒரு ஆணாக இருப்பதன் சௌகரியங்கள் விடுதியறைகளில் மட்டுமே பெண்களுக்கு வாய்க்கின்றன. ‘வேலையற்ற, எழுத்தாள ஆண்’என்று வேண்டுமானால் ஒரு வசதிக்காகச் சேர்த்துக்கொள்ளலாம்.

எழுத எழுத ஒன்று புலனாகிறது. புல் வளர்ந்து மூடும் ஒற்றையடிப்பாதையென, இறந்தகாலம் பின்னழிந்து செல்கிறது. வலிகளை வரிகளாக மாற்றிப் பரணில் எறிந்துவிட வெறிகொள்கிறேன். மனதைக் கெட்டிப்படுத்திக்கொண்டு தீ தின்னக் கொடுத்துவிடுவது இன்னமும் உத்தமம்.

மௌலி! நீ எனது நாட்களில் நுழைவதன் முன் எப்படி இருந்தேன் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். கட்டுப்பாடான, குடும்பத்திலும் சமூகத்திலும் அக்கறையுள்ள, உறவுகளின் கதகதப்பில் பாதுகாப்பாக, தீங்கிழைக்கச் சம்மதியாத, சாத்தியமுள்ள இடங்களில் மிக உண்மையாக நடந்துகொள்ளக்கூடிய, ஒழுங்கமைக்கப்பட்ட பட்டியல்களால் நாட்களை நிறைத்துக்கொள்வதன் வழியாக குற்றவுணர்வைத் தவிர்த்துக்கொள்ள முயல்கிற, நம்பும் கொள்கைகளில் சமரசங்கள் செய்துகொள்ளப் பிடிக்காத ‘அக்மார்க்’ நல்ல மற்றும் தமிழ்ப் பெண். சமூக அளவுகோல்களின்படி நானொரு அருமையான குடும்பப்பெண்!

த்தூ! நாசமாய்ப் போகட்டும்! என்னை நானாக இருக்க அனுமதிக்காத சமூக மதிப்பீடுகள்.
இந்த அகலிகை காத்துக்கொண்டிருந்தது ராமனின் காலடிபட அல்ல; இந்திரனின் அணைப்பில் மயங்க. ‘நல்ல பெண்’ அரக்கு முத்திரையிடப்பட்ட சிறை எனக்கு மூச்சுமுட்டியது. எல்லோருக்கும் எப்போதும் ‘தாயாக’இருப்பது சிரமம் மௌலீ! எனது தாபத்தை, ரசனையை, வாசிப்பை, காமத்தைப் பகிர்ந்துகொள்ள யாருமற்ற உள்வட்டம் மிகத் தனி. கருப்பை இருட்டென்றாலும் எவ்வளவு பாதுகாப்பானது. பெண்கள் வாழும் அறைகளைப் போலில்லை அது.

‘பெண்கள் புரிந்துகொள்ளப்பட முடியாதவர்கள்’என்று காதலர்கள் தொட்டு கவிஞர்கள் வரை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அரைத்த அரதப் பழசான வாக்கியங்களைத் தன்னுணர்வின்றிச் சொல்வது நமக்கே சாத்தியம். ஆனால் மௌலி! ஒரு சட்டைக் கசங்கலில் விழுத்தும் கவனத்தைக் கூட எங்கள் முகக் கசங்கல்களில் விழுத்துவதில்லையே நீங்கள். – திருமணத்தின் பின் என்று சேர்த்துக்கொள்.
இந்த உலகம் உங்களுக்கானது; உங்களால் வெற்றிகொள்ளப்படக் காத்திருப்பது. பெண்ணுடலும் பந்தயப்பொருள்தான். வழுக்குமரத்தின் உச்சியில் கட்டப்பட்ட பணமுடிச்சுத்தான். கைப்பற்றியாயிற்றெனில் சரசரவென இறங்கிவிடவேண்டியதுதான்.

நானும் ஒருபோதில் வெற்றிகொள்ளப்பட்டேன். போரின் பின்தங்கும் சூனிய நகரமென ஆனேன். அந்நகரத்தில் பாடிய பறவைகள் எங்கு போயின? வளர்ப்புப் பிராணிகள் என்னவாயின? சிதிலமடைந்த கட்டிடங்களுள் துடிக்கும் ஆன்மா என்னவாகும்? தலையறுந்த மரங்களினுள் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது? வீதிகள் தமது நீண்ட விழிகளால் தனது மனிதர்களின் மீள்திரும்புகைக்குக் காத்திருப்பதை யாரோ நினைந்துருகுவர்?

திருமணம் பெண்களைச் சாய்த்துவிடுகிறது என்று நான் சொன்னால், நீ திடுக்கிட மாட்டாய். நான் என்ன கதைப்பேன் என்பது உனக்கு மனப்பாடம்.

முதலில், பிடித்த கவிதை – பிடித்த புத்தகம் - பிடித்த கவிஞர் - பிடித்த வலைப்பூ - பிடித்த பாசுரம் - அது பிடிக்குமா… இது பிடிக்குமா… என்னைப் பிடிக்குமா? இணைய அரட்டை எங்கு கொண்டு சேர்க்குமென்று அறிந்த நண்பர்கள் அறிவர். அவ்வளவுதான்! ஆயிற்று!

உனக்கு கனிவான பெண் வேண்டியிருந்தாள். எனக்கு கனவுகளில் நான் கண்டு தழுவிய காதலன் வேண்டியிருந்தான். உனது தேவை ஒரு மடி. எனது தேவை ஒரு தோள். தோளும் மடியும் மீறிச் செல்வோம் என்று எனக்கும் தெரியும். நீயும் அறிவாய்.
நான் காதலனாயிருக்கக் கேட்டேன். நீ கணவனாயிருக்க விழைந்தாய். அதிகாரத்தின் கொடியை என்மீது பறக்கவிடவேண்டும்; யாரும் அறியாதபடி.

பெண் எனும் சலிக்காத ஞாபகமூட்டலில் விழிபிதுங்கும் கோடிக்கணக்கான பெண்களில் நானுமொருத்தி. வீட்டில் எனக்கு நானே பூட்டிக்கொண்ட விலங்குகளை உடைத்தெறியும் என் பிரயத்தனத்தின் வழியில் எதிர்ப்பட்டவன் நீ. ‘என் பங்கிற்கு இந்தா ஒரு பூட்டு’என்றால் தாள்பணிந்து அதைப் பெற்றுக்கொள்ள வேண்டாமா நான்? பெற்றுக்கொள்ளவில்லை! ‘இது நெருப்பு… மடி தாங்காது’என்று போய்விட்டாயா என் அன்பே! ‘நான்’ என்ற என்னையும் காதலின் பொருட்டு இழக்கத் தயாராக, கீழைத்தேய நச்சுநிழலில் வளர்ந்த செடியாகவும் சித்தமாயிருந்தேனல்லவா…த்தூ! இந்த எச்சில் எனக்கன்றி உனக்கில்லை!

ஆற்றாமைதான். ஐயமில்லாமல் ஆற்றாமைதான்.

முதல் கோடரி வெட்டு எனது நண்பர்களின்மீது. ‘வலைப்பூவில் உன்னைப் பற்றி எழுதுகிறான்’என்று புகார் செய்தாய். எழுதட்டுமே!

“நண்பர்களாலும் காதலர்களாலும் ஆன

இந்த உலகத்தைக் கொண்டாடுகிறேன் ஓஷோ!”

என்று எழுதியவள் நானல்லவா? என்னையொருவன் நேசித்து கவிதை எழுதினால் எனக்கு மகிழ்ச்சிதான். அதனையிட்டுக் களிகொள்வது ‘வேசி மனம்’எனில், நான் வேசியாகவே இருந்துவிட்டுப் போகிறேன். இந்தக் கண்ணகி வேடம் களைப்பாயிருக்கிறது. அணிகலன்கள் உறுத்துகின்றன. மேகலை எத்தனை பாரம்.

எல்லாம் கட்டுக்கதை! கற்பு என்பது கட்டுக்கதை என்று உண்மை பேசிய ஒருத்திக்கெதிராக விளக்குமாற்றை உயர்த்திய உங்கள் காலடியின் கீழ் பெருக்கித் தள்ளப்படுவதற்காக எத்தனை நூற்றாண்டுப் புழுதி காத்திருக்கிறது. ஆள்பவரிலிருந்து அடித்தட்டு மக்கள் வரை கற்பு என்ற கற்பிதத்தை, ஆண் என்ற அதிகார விருட்சத்தின் ஆணிவேர் அசையாமலிருப்பதற்காகத்தானே தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

மௌலீ! நீ ஒரு தடவை கேட்டாய் “நீ ஏன் கூட்டங்களுக்குப் போகிறாய்? அங்கு என்ன அறிவுமழையா பொழிகிறது?”என்று. இலக்கியக்கூட்டங்களுக்குப் போகும்போதெல்லாம் ‘இடி விழ’என்று நினைத்துக்கொண்டுதான் போகிறேன். மேடையையும் சபையையும் ஆண்களே நிறைத்திருக்க, ஆங்காங்கே ஒரு சில பெண்கள் பாயசத்தில் பயறு போலவோ, மலத்தில் புழுக்கள் போலவோ (இந்த உவமானம் உனக்குக் குமட்டுமே) அமர்ந்திருக்கப் பார்ப்பது எத்தனை ஆயாசம் தருகிறது. பெண்களே இல்லாத சபையைப் பார்த்து ‘சகோதரிகளே’என்று யாராவது விளித்தால் ‘அட கொக்கமக்கா’என்றுதான் வையத் தோன்றுகிறது.

‘பெண்களை யார் தடுத்தார்கள்… போகவேண்டியதுதானே..?’என்ற மேம்போக்கான, பதிலுக்குக் காத்திராத சோம்பேறிகள் இந்தப் பந்தியிலிருந்து கழன்றுகொள்ளவும். ‘காலையில் எழுந்து கக்கூசுக்குப் போய்… காப்பி கலந்து… கலவி முடித்து கண்ணயரும்வரை..’என்று பட்டியல் போட்டு ‘அதனாலே பெருமக்களே!அவளால் இலக்கியக் கூட்டங்களுக்குப் போகமுடியாது’என்று வகுப்பெடுக்காமலே நிலவரம் தெரியும்.

இலக்கியக் கூட்டங்களில் அறிவுமழை கொட்டுவதில்லைத்தான். பல சமயங்களில் தூக்கம் கண்ணைக் கட்டுவதையும் மறுப்பதற்கில்லை. ஆனாலும், ஒரு ஆர்வம், எழுத்தின்பாலான கிறக்கம், யாராவது அரிதாக அறிவாக செறிவாகப் பேசமாட்டார்களா என்றொரு எதிர்பார்ப்பு, நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு.. இதையெல்லாம் வேண்டித்தான் போகிறேன். உன்னைப்போல் காதலர்களும் கணவர்களும் இருக்கும்வரை, நாங்கள் சமையலறைக்கு நேர்ந்துவிடப்பட்ட பெட்டைக்கோழிகள்தான்.

மௌலி! உன்னைப்போல்தான் பல ஆண்கள். ஒன்றின் நகல் மற்றொன்றாய். “நீங்கள் பெண்ணாக இருப்பதன் நிமித்தம் உயர்த்திப் பிடிக்கிறார்கள்”என்று அண்மையில் ஒரு அறிவாளி பேசினான். வாசகர்களையும் திரைப்பட ரசிகர்களையும் இத்தனை குறைவாய் மதிப்பிட்டுத்தான் இவ்வளவு தேக்கம். நிலா, கடல், முகில், பட்டாம்பூச்சி, வானம், மழை, துயரம் இன்னபிற சொற்களை மட்டும் முதலாய் வைத்து மாற்றிமாற்றி இட்டுக்கட்டினால் எத்தனை காலத்திற்குப் பிழைத்திருக்க முடியுமென்றெனக்குத் தெரியவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்குமான ஈர்ப்பு அழிக்கமுடியாதது. அந்த ஈர்ப்பின் பொருட்டு ஒன்றுமில்லாததை உசத்தி என்பவன் வாசகனே அல்ல. அந்த ரசனை மழைக்கால விட்டில்களின் ஆயுளையொத்தது.

இன்று என்னவோ தெரியவில்லை. பேச்சு ஒரு போக்காகவே போய்க்கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு கோபம். ஏதோ ஒரு கொதிப்பு. இது வழக்கமாக நான் உனக்கு எழுதும் கடிதத்தின் சாயலில் இல்லை.

எனது கவிதைகளைப் பற்றி நீ சொன்ன ஒரு வாக்கியத்தை நான் எனக்குள் பொத்திவைத்திருக்கிறேன். ஏனென்றால், என் எழுத்தின் மீது நீ ஒரேயொரு தடவைதான் மயிலிறகால் வருடியிருக்கிறாய்.

“எனக்கு உன் கவிதைகளின்பால் மரியாதை இருக்கிறது. வலியுணர்ந்து, அதை வாசிப்பவர் உணருமாறு அவர்களுக்குள் கடத்துவது எளிதன்று. உனக்கு அது வாய்த்திருக்கிறது. உனது வலிகளின் மீது முத்தமிடுகிறேன்”

எனக்கு உன் எழுத்தின் மீது கொஞ்சமல்ல; நிறையவே மதிப்பிருக்கிறது. சரியான இடத்தில் சரியான நேரத்தில் இல்லாமல் போகிறவர்கள் மறக்கப்படுகிறார்கள். அவ்வளவே! இலக்கிய அதிகாரங்களின் ஆதிக்கத்தை மீறி நல்ல எழுத்து நிலைக்கவே நிலைக்கும்.

“போகட்டும் போ! புண்ணாக்குப் பயல்கள்… என் கவிதை நிற்குமடி!”

புகைவளையங்களினூடே வித்துவக் கர்வம் பொதிந்த உன் வார்த்தைகள் மிதந்து வருகின்றன. உன் கர்வம் உனக்கொரு மகுடந்தான். நான்கூட ‘புண்ணாக்கு’என்று திருப்பியடிக்கப் பழகியிருக்கிறேன். என்னிடமும் திமிரின் சாயல் தலைதூக்கவே செய்கிறது. எல்லாம் உன் சகவாசந்தான்.

நீயே சொல்! அந்தக் கம்பீரச் சுழலில் கவிழ்ந்துபோன சிறு படகா நான்?

எப்போதும் என்னைக் கிழிக்க குறுவாளோடு அலைகிற எனது நண்பன் சொல்வான்.

“உனக்குள் ஒரு கீழைத்தேய அடிமை இருக்கிறாள். அவள் ஆளப்படுவதை வரவேற்கிறாள்.”

அவனுக்குப் பொறாமை. காதலின் தரிசனம் கிட்டாத பாவி அவன். அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன். ‘அப்படி’ அல்லது ‘இப்படி’ என்று ஓருருவாய், வார்க்கப்பட்ட பதுமையாய் இருக்கவேண்டுமா என்ன? ஓருருவே எனதென்றால் நான் பேருருவாய் ஆவதெப்படியோ? என்னின் அதிகபட்ச சாத்தியங்களை நிகழ்த்திக் காட்டுபவளாக மாறவேண்டும். காதலில் கனிபவள் கம்பீரம்கொள்ளும் தருணங்கள் இல்லையா என்ன? காதலும் ஒருவகைக் கம்பீரம்தானே... சிலையென கல்லினுள் சிறையுண்டு கிடவேன். நெகிழ்ந்து உருமாறும் பேய்ப்பெண் நான்.

பசிக்கிறது. இது வீடில்லை. ஆண்களால் பரிமாறப்படும் உணவுச்சாலைக்குப் போகிறேன். இங்கு நகைப்புக்குறியிட இது வலைப்பூ அல்ல.


-தமிழ்நதி

குறிப்பு: நான் எழுதிக்கொண்டிருக்கும் நாவல் - அதை அப்படிச் சொல்வது பொருந்துமோ என்னவோ வடிவத்தில் அடிக்கடி தன்னை மாற்றிக்கொள்கிறது. மேலே நான் எழுதியிருப்பது அதில் இடம்பெறும்.. பெறாது. அதை அதன் போக்கில் விட்டிருக்கிறேன். 'தன்னைத்தான் எழுதிச்செல்கிறது' என்று சொல்வது மிகையில்லைத்தானோ?

Wednesday, April 8, 2009

‘பூமியின் இரத்தம் தண்ணீர்’


மனித நாகரிகம், நீர்நிலைகளை ஒட்டி வளர்ந்தே பிரபஞ்சத்தைப் பேணும் வித்தையைக் கற்றுக்கொண்டது. தண்ணீரின் அருமை உணர்ந்த சமுதாயமாகத் தனது பண்பாட்டுக்கூறுகளைக் கட்டியெழுப்பிச் சேகரித்துக்கொண்டது. மனிதனோடு ஓர் உயிரியாகவே தண்ணீர் பிரதானம் வகிக்கிறது. வரலாற்றின் பக்கங்களில் எல்லாப் போராட்டங்களும் அவை சார்ந்த அரசியல் வடிவங்களும் நீரையும் அதற்கான போரையும் மையமாக வைத்தே கிளர்ந்துள்ளன. நீரை வழிபடும், பயன்படுத்தும். ஒரு பண்பாட்டு ஊடகமாக மாற்றும் சமூகம் வழியாகவே மானுடநாகரிகம் திரண்டு வந்திருக்கிறது. கடல், ஆறு, ஏரி இன்னபிற நீர்நிலைகள் ஒரு மௌனப்பாய்ம நிலையிலிருந்து மானுடவாழ்வின் மீது தமது அக்கறையைத் தொடர்ந்து அளிக்கின்றன. அதற்கான வாழ்வியலை வடிவமைத்து மேற்கொள்ளும் மனிதன் கண்டுபிடித்த விவசாயமுறைகள், கலைவடிவங்கள் எண்ணற்றவை. கடலை ஓர் உடலாகப் பார்க்கும் மீனவச் சமுதாயமும் கடலினைப் பாதுகாத்தல் குறித்த நெறிமுறைகளைத் தீவிரமாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கின்றது. நீர்நிலைகளின் இயற்கையான சீற்றங்கள் குறித்த அச்சம் மனிதனுக்கு இருந்தாலும் அவை விரித்துத்தரும் அழகியல்வெளிகள், வாழ்வியற்பயன்பாடுகள், ஆன்மஎழுச்சிக்கான கூறுகள், களிப்பு கூட்டும் தருணங்கள், பருவமாறுபாடுகளின் அரண்கள் குறித்த விழிப்புணர்வை, மானுடவாழ்வின் இறையாண்மை குறித்த பாடங்களைத் தன்னிச்சையாகப் பயிற்றுவிக்கும் கூடங்களாக விளங்குகின்றன. நீரை மையமாக வைத்து எழுப்பிய அநேக அரசியல் இயக்கநிலைகளைப் புரிந்துகொள்ளமுடியும். இயற்கையின் மூலங்களில் ஒன்றான தண்ணீரைச் செம்பொருளாய் நோக்கும் தமிழ்ச்சமுதாய மரபில் இன்று நாம் வந்துசேர்ந்திருக்கும் இடமோ, அதை ஒரு கழிவுநீராயும், வாணிபத்திற்குரியதாகவும் ஆக்கியிருக்கும் நிலை.


சிலப்பதிகாரத்தில் ‘காவிரி’ ஒரு கதைமாந்தராய் உலவிப் போற்றப்படும் கட்டங்களும், கதையின் போக்கை நிர்ணயிக்கும் காட்சிகளும், விதியினை நிர்ணயிக்கும் தருணங்களும் அக்காலத்து காவிரி – மானுட உறவின் மாண்பினையும், காவிரியை ஒரு பாடுபொருளாக்கி அதைச் சுற்றி ஓர் அரசியல் உருவெடுக்கும் பாங்கினையும் காட்டுகின்றன. சங்ககாலத்தினூடும், இலக்கியங்களோடும் பாய்ந்து இன்றைய நம் வாழ்வினையும் துளைத்துப்பாயும் காவிரியின் கரை நெடுகிலும் பயணித்தாலும் எந்த இடத்திலும் அது ஓரிடத்தில் பாய்வதுபோல் ஓடுவதில்லை. அதன் ஒயில் இடத்திற்கு இடம் மாறிக்கொண்டேயிருக்கிறது. சில ஊர்களில் வீடுகளின் கொல்லைப்புறம் வழியாக ஓர் இளம்பெண்ணைப்போல், ரகசியங்கள் புதைந்த நெஞ்சோடு ஓடும் நதியில் நீராடிக் களைப்பாற்றும் பெண்கள் நுகரும் சொல்பெறா அனுபவம் எத்தகையதாயிருக்கும் என்பது பதிவில் அடங்காதது. ‘வசையில் புகழ் வயங்கு வெண்மீன்- திசை திரிந்து தெற்கேகினும் - தற்பாடிய தளியுணவிற் - புட்டேம்பப் புயன் மாறி – வான் பொய்ப்பினும் தான் பொய்யா – மலைத்தலைய கடற்காவிரி – புனல் புரந்து பொன்கொழிக்கும்’ என்ற உருத்திரங்கண்ணனாரின் பட்டினப்பாலை வரிகளும் காவிரியின் புகழ்பாடுகின்றன. ஆனால் இன்றைய காவிரியின் படுகைகள் பல இடங்களில் வெளிறிய வளமற்ற உடலுடன் காணப்படுகின்றன.

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் நீரை வழிபடும் விழாவான இந்திரவிழாவை முக்கியப்படுத்துகின்றன. புத்தர் துறவறம் மேற்கொள்ளக் காரணமாக இருந்தது கூடரோகிணி என்றும் ஆறுதான். சாக்கியர்களின் அரச எல்லையில்தான் கோலியர்களின் அரசு இருந்தது. இந்த இரு அரச எல்லைகளும் ரோகிணி ஆற்றால் பிரிக்கப்பட்டிருந்தன. ரோகிணியின் நீர், தங்கள் வயல்களின் பாசனத்திற்காக சாக்கியர்கள், கோலியர்கள் ஆகிய இரு தரப்பினராலும் பயன்படுத்தப்பட்டுவந்தது. ஒவ்வொரு பருவத்திலும் அவ்விரு தரப்பினருக்கிடையே யார் முதலில் ரோகிணியாற்றின் நீரை எடுப்பது, எவ்வளவு எடுப்பது என்பது குறித்த விவாதங்கள் எழுந்தன. அவ்வாதம் முற்றிப் போராக உருவெடுக்க இருந்த தருணத்தில், போரிடப் பணித்த சங்கத்தின் வேண்டுகோளை ஏற்க மறுத்ததால் புத்தர் நாடுகடத்தப்பட்டார். இத்தகைய அரசியல் திருப்பங்களை ஏற்படுத்துவதில் ஆறுகள் முக்கிய இடம்வகிப்பது நிகழ்காலத்திலும் கண்கூடானது.

நிலவுடமையைப் போன்றே பெண்ணையும் ஓர் உடைமையாக நோக்கிய சமுதாயத்தில் ஆண்மை வடிவமைத்த வளர்ச்சித்திட்டங்களும், அவசர விளைச்சல் சார்ந்த நடவடிக்கைகளும் இயற்கையை ஒரு வெறித்தன்மையுடன் அனுபவிக்கும் மனிதசமுதாயமாக மாற்றியுள்ளன. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் கணவனோ, மனைவியோ ஒரு கண்ணாடிக்கூண்டுள் அனுப்பப்படுவார். வீசும் காற்றில் சுழன்றடிக்கும் பணக்காகிதங்களை ஒருவர் எவ்வளவு கைப்பிடித்துச் சேமிக்கிறாரோ அவ்வளவையும் அவரே வைத்துக்கொள்ளலாம். மனிதனின் பேராசை மனோபாவத்தைப் பரீட்சித்துப்பார்க்கும் அல்லது அந்நோக்கத்தை வளர்க்கத் தூண்டும் இந்நிகழ்ச்சி, இயற்கையின் இயற்பியலுக்கு முற்றிலும் புறம்பானதொரு வாழ்க்கையைக் கைக்கொள்ளத்துணியும் மனிதனுக்கானது. இயற்பியலின் தருக்கமோ பேராசைக்கு முற்றிலும் எதிரானது.

மண் கட்டமைப்பாளர்களும் நீர் வல்லுநர்களுமான பெண்களின் பெரும்பாலான காலமும் ஆற்றலும் வாழ்க்கையும் சிந்தனையும், மண்ணையும் தண்ணீரையும் பேணுவதில் செலவிடப்பட்டுள்ளன. மண்ணுரிமைப் போராட்டங்கள் அந்தந்த நிலப்பரப்பிலிருந்து எழும் பெண்ணிலைவாதக்கோட்பாடுகளோடு நெருங்கிய உறவு கொண்டிருப்பதன் காரணமும் அதுவே. வீட்டின் நீர்மேலாண்மையும், சமூகத்தின் நிலமேலாண்மையும் பெண்கள் கைகளில் ஒப்படைக்கப்படும் பட்சத்தில் பெண்கள் தம் கருப்பையைப் பேணுவது போன்றே நீர். நில ஆதாரங்களையும் அழிவிலிருந்து மீட்கமுடியும். பெண்கள் தமது வயதையும், பருவங்களையும், நினைவுகளையும் இயற்கையின் சம்பவங்களோடு இணைத்து உள்வாங்கிக் கொள்வதிலிருந்து, பெண்கள் இயற்கையைத் தமது உடலின் காலமானியாகக் கருதுவது புலனாகும். இயற்கையின் சுழற்சியில் அங்கம் வகிக்கும் பெண்களின் நீர், நில நிபுணத்துவத்திடம் எந்த அறிவியலாளரும் முன்னிற்க முடியாது.


சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் நடுநிசி 2-3 மணிகளில் கூட குடங்களோடு வீட்டுப்பெண்கள் குடிநீர் வண்டிகளுக்காகக் காத்திருந்ததும் அது குறித்தான காலவரையறைகளும் இன்று முற்றிலும் மாறியதற்குக் காரணம் தீவிரப்படுத்தப்பட்ட மழைநீர்ச்சேகரிப்புத்திட்டம். அதேசமயம், வேனிலின் உக்கிரத்தை நிழல் பரப்பும் மரங்களற்ற தார்ச்சாலைகளில் பாயும் கானல்நீரோட்டங்கள் சித்திரமாக்குகின்றன. நீரின் மாயஅலையாக கானல்நீரலை.


வேளாண்மைச் செயற்பாடுகள், விஞ்ஞானம், மண்ணைச் சூறையாடல், விதைகளின் கருவறுத்தல் என நிலத்தையும் நீரையும் ஆக்கிரமிக்கும் அதிகாரத்தின் வடிவங்களை ஆண்கள் கண்டடைந்து செயல்படுத்தும்போதெல்லாம், பெண்கள் நீர்நிலவெளிகளின் பண்பாடுகளிலும் விழாக்களிலும் ஆழ்ந்த தமக்கான விடுதலையின் கதவுகளைத் திறந்துகொள்கின்றனர்.


நாளுக்குநாள் வெப்பமாகிக்கொண்டிருக்கும் பூமியில் நீரின் சுனைகளைப் பெருக்குவது அத்தியாவசியமாகத் தோன்றுகிறது. இச்சுனைகள் மேகமூட்டங்களுக்கிடையே, பெரும் மரக்கூட்டங்களுக்கிடையே, இயற்கையின் மீதான பரிவு கொண்ட தொடர்செயற்பாடுகளுக்கிடையே ஒளிந்திருக்கின்றன.
நீர்நிலைகளை மையமாகக்கொண்டு தமது தினப்படி நடவடிக்கைகளைப் பின்னியிருப்பதும், நீரைத் தமது அந்தரங்கத் தேவைகளுக்காகக் கொணர்ந்துவந்து சேர்க்கக் கைக்கொள்ளும் உபாயங்களும் சிரமங்களும் ‘நீர்’செலுத்தும் அரசியலை விளங்கவைப்பவை. சுடுமணலில் பல மைல்கள் நடந்து சென்று நீரைச் சுமந்து வீடு சேர்ப்பதையே அன்றாடப் பணியாகவும், அதற்காகவே பலமணி தூரங்கள் நடக்கப் பயன்படுத்தப்படும் பெண்களும் சிறுமிகளும் தமிழகத்தில் இலட்சக்கணக்கானோர். நீர்நிலைகள் தூர்ந்துபோன தொலைதூரக்கிராமங்களின் வாழ்வியல்மொழி, யதார்த்த மனிதனின் அகராதியிலடங்கா ஓர் இயல்பைக் கொண்டிருக்கும்.


நீர்நிலைகளையும், மழையையும், தமது புலனுணர் அறிவையும் ஆதாரமாகவும் மூலதனமாகவும் கொண்டு செயல்பட்ட விவசாயி இன்றைய நவீனகாலத்திற்குப் பொருந்தாத, அவசியமற்ற ஓர் ஆளுமையாகிவிட்டான். அவன் மீதான சூறையாடல் பலவடிவினது. பசுமைப்புரட்சியும் இயற்கைநசிவும் கொஞ்சம் கொஞ்சமாய்க் கருப்பை தூர்ந்த பெண்களைப் போன்றதான பூமியின் மீது ஏதும் செய்யத் தெரியாமல் நிகழும் ‘விவசாயிகளின் தற்கொலை’ நவீனவாழ்வின் சிக்கல்கள் எதிரொலிக்கும் ஒரு படிமமாகவே தோன்றுகிறது. நீரை அரக்கர்களைப் போன்று குடிக்கும் பசுமைப்புரட்சி விதைகளின் முன் பருவமழை, மண்ணின்தன்மை என எல்லாவற்றோடும் ஒழுங்கமைதி கொண்டு வளரும் பாரம்பரிய விதைகளின் முன் நவநாகரிக மனிதனின் அவசியமற்ற புரட்சிகள் கண்விழிக்காத விதைகளாகிவிட்டன. பசுமைப்புரட்சி விதைகளைப் போலவே மனிதர்களும் நீர்வெறி பிடித்த மனிதர்களாய் மாறிக்கொண்டிருக்கின்றனர். ஒரு விவசாயியின் அனுபவஅறிவு என்பது நீரின் ஓட்டம், வானியல் புரிதல் அவை சார்ந்த அடையாளக்குறிகளைப் புரிந்துகொள்ளல், மண்ணின் உயிர் என எல்லாவற்றையும் ஒன்றுகூட்டிப் பொருளுணர்ந்துகொள்ளும் மாண்பு மிக்கது. வறுமையை ஓர் அழகியலாகச் சித்தரிக்கும் போக்கும், வறுமையைக் காரணம்காட்டி விவசாயியின் வயிற்றில் எரிமலைக்குழம்பை ஊற்றும் வளர்ச்சித்திட்டங்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை அன்று.


அண்மையில் தொண்ணூறு வயது நிறைந்த ஒரு மூதாட்டி மறைந்தபோது பல வருடங்களாய் அவர் மண்கலயத்தில் சேகரித்துக் காத்துவைத்திருந்த பாரம்பரிய நெல்விதைகளின் விதைநெல்கள் தொல்லியல்துறைக்கு மிகுந்த வியப்பைக் கொடுத்துள்ளன. இக்குறிப்பிட்ட நிகழ்வு வெளிப்படுத்தும் பெண்களின் பொதுவான மரபார்ந்த மனோபாவமும் மரபார்ந்த அறிவுத்தொகைமை மீது கொண்டிருக்கும் காப்புரிமையும் எந்தப் பெரிய போராட்டத்திற்கும் புரட்சிக்கும் எதிர்நிற்கக்கூடியது. தனிப்பெண்ணின் விழுமியம் இயற்கையின் மகத்துவத்தை உணர்ந்து பேணுவதாலும் போற்றுவதாலும் நிறைந்திருக்கிறது.


மண்ணின் நீரோட்டங்களுக்கும் நீர்வெளிகளுக்கும் கட்டுப்பட்ட தாவரஇனங்கள் அச்சூழலை அனுசரித்து வளர்கின்றன. இவை நீரை நிலைப்படுத்தவும், சேகரிக்கவும் செய்கின்றன. இம்மரம், செடிகொடிகளைப் பறவைகள் நாடிவருகின்றன. மேலும் பறவைகள் தமது வாழிடங்களாக இந்நீர்நிலைகளையும், மரங்களையும் அடையாளப்படுத்துகின்றன. நீர்நிலைகள், தாவரவெளி மற்றும் பறவைகளின் பெருக்கம் இயைந்த சூழலை மிருகங்களும் பறவைகளும் தமது வாழ்க்கைக்கு நிழலாக்குகின்றன. இத்தகைய உயிர்ச்சக்கரத்தை ‘இயற்கை’ செவ்வனே சமைக்கிறது.
‘நீரும் சோறும் விற்பனைக்கல்ல’ என்ற அறச்சிந்தனை கொண்டிருந்த தமிழ்ச் சமூகத்தில் எல்லாம் பைகளில் விற்கப்படுகின்றன. சென்னையில் வாழும் ஒருவரின் நீர் பற்றிய சிந்தனையும், அதைச் சார்ந்த செயல்பாடுகளும் வேடிக்கையானவை. சென்னை வாழ் மக்கள், வேறு ஊர்களுக்குப் பயணிக்க நேரிட்டாலும், நீரின் தூய்மை குறித்த அச்சம், கிராம நீர்வழிமுறைகளைப் பழித்தல், எவ்வளவு தாகம் எடுப்பினும் சுத்திகரிக்கப்பட்ட குப்பிகளில் அடைக்கப்பட்ட நீரையே பருகும் தீவிரம் என அவர்கள் பயணத்தை நீர் குறிப்பிடத்தக்கதாக ஆக்கிரமித்திருப்பதற்குக் காரணம், சென்னையின் நீர்வள ஆதாரங்கள் சாக்கடையாக மாறியிருப்பதும், நீர்நிலைகள் சார்ந்த ஆரோக்கியமான வாழ்வியல் செயல்பாடுகள் அற்றதொரு வாழ்க்கைமுறையும், வணிகரீதியாக இயங்கும் எதன் மீதும் அதீதமான நம்பிக்கை கொண்டிருப்பதும்தாம்.


கடந்தகால வரலாற்றில் நீரைச் சூறையாடிய நிகழ்வுகள் நிறைய நிகழ்ந்துள்ளன. இன்னமும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. சிறுசிறு கிராமங்களின் வழியே பயணிக்க நேரிடும்போதெல்லாம் கண்ணுக்குத் தென்படும் வயலும் வயல்சார்ந்த வெளிகளும், வண்ணத்துப்பூச்சிகளைப்போல் பல உறைந்த வண்ணப்புடவைகளில் பெண்கள் ஓர் ஒழுங்கமைதியுடன் இயங்கிக்கொண்டிருக்கும் அழகும், தனக்கு உரிமையில்லாத மண்ணோடு அவர்கள் உறவுகொண்டு தாவரஇனம் பெருக்க முன்வைக்கும் மன்றாடலும் கண்பார்வையை இழுத்துக்கட்டுபவை. நிலவுடைமைச் சமுதாயத்தின் அரசியலும், ஒடுக்குமுறையும் நமக்குப் புரியாததன்று. ஆனால் மண்ணின் பசுமையைப் பேண அன்றாடம் நீரோடும் வெயிலோடும் மண்ணோடும் பொழுதுகளோடும் போராடும் பெண்கள் தம் உயிருக்கு இணையான ஒன்றாய் நிலத்தையும் நீரையும் அவதானிக்கும் தார்மீக உணர்வுடைய மேற்கண்ட காட்சியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது, நமது புவியியலுக்குப் பொருந்தாத கருவேல மரங்களும் யூகலிப்டஸ் மரங்களும் கொண்ட நிலவெளி. மெய்ஞானத்துக்கும் யதார்த்தத்திற்கும் புனைவிற்கும் வழிவிடாத இம்மரங்களாலும் இவை தரும் வருமானத்தாலும் என்ன பயன்?

பாலாற்றுக்கரையெங்கும் எறும்பின் சாரையைப்போல மண்ணை அள்ளிப்போக அணிவகுத்து நிற்கும் லாரிகள், கடலுக்குள் அணுமின்கழிவுகளை வெளியேற்றிச் சமாளிக்கத் திட்டமிட்டிருக்கும் அணுமின்நிலையங்கள். ஆற்றுநீரை குழாய்கள் போட்டு உறிஞ்சிக்குடிக்கும் நச்சுநீர்ப்பான தயாரிப்புஆலைகள், நதிநீரை இணைக்க முண்டியடிக்கும் அரசியல் ஆர்வலர்கள், சேதுசமுத்திரத் திட்டம் என்னும் பெயரில் தண்ணீர்ப்பாலம் கட்டத்துணிந்தவர்கள் எனக் காட்சிகள் விரிய நீராதார வளர்ச்சித்திட்டம், நீர் மேலாண்மை, நீர்ச்சிக்கல் என்ற வகையில் நீர் தொடர்பான பிரச்சனைகளை அலசுவது அதை மலினப்படுத்துவதாகும். நீருடன் மனிதனும் மற்ற உயிரினங்களும் கொண்டிருக்கும் ஆன்மஉறவைப் புரிந்துகொள்ள வலியுறுத்தும், கற்பிக்கும் கலை இலக்கிய வடிவங்களும் தர்மங்களுமே மேன்மையானவை.


வேறுபட்ட நிலவெளிகளோடும் பொழுதுகளோடும் ஒரு செம்புலத்தன்மையோடு திகழ்ந்த தமிழகம், முற்றிலும் ஒரு பாலைவெளியாகி பித்தவெடிப்புகளோடு காணப்படுகிறது. சித்தமருத்துவத்தில் கருங்குருவை அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் ‘காடி’நீர் உலோகங்களை மடியவைக்கவும், காரங்களைச் சுத்திகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அந்நீர் அன்றைய சுத்திகரிக்கப்பட்ட நீரினும் தூய்மையும் சிறப்பான பண்புநலன்களும் நிறைந்தது. இத்தகைய மரபார்ந்த நீர்ப்பயன்பாட்டையும் சேகரிக்கும் எண்ணிலாத தொழில்நுட்பங்களையும் தனது பண்பாட்டில் கொண்டிருந்த தமிழ்ச்சமூகம் குளிர்ந்த நிலங்களற்ற பாலையானதாக மாறியிருப்பதன் படிமங்கள் பெருகிக்கொண்டேயிருக்கின்றன.

சென்னையில் ஒரு மழைநாளைப் பற்றிய நினைவு மிகவும் அந்தரங்கமானது. சுழன்றுசுழன்று சென்னையை வளையவந்தது மழை. எவருடைய அந்தரங்கவெளியினுள்ளும் மற்றவரை நுழையவொட்டாதபடி ஒவ்வொருவருக்கும் இடையே திரையைப்போல வீழ்ந்து சரிந்தது. பெண்கள் எல்லோரும் நீர் வடியும் உடலங்களாய், அவர்கள் தமக்குத் தேவையானவற்றையெல்லாம் பூமியிடம் வேண்டிப் பெற்றுக்கொள்வதைப்போல, பூமி மழையை வேண்டிப் பெற்றுக்கொண்டிருந்தது. ஏனெனில், ‘பூமியின் இரத்தம் தண்ணீர்’.

குட்டி ரேவதி

உயிருக்கு உடலே உணவு

உடலினை உறுதிசெய்யும் தத்துவங்களாலும் வெளிப்பாட்டுவகைகளாலும் தமிழ்மரபை நிலைபெறச்செய்த மாண்பு எவரையும்விடத் தமிழ்மருத்துவர்களான சித்தர்களுக்கு உண்டு. உடலை ஒரு கருவியாக்கி அதன் வழியாகச் சமூகப்பொறுப்பை ஏற்கும் உபாயங்களை, உடல்தத்துவத்தையும் வாழ்வியல்முறைகளையும் இணைப்பதன் வழியாகக் கூறியவர்கள் அவர்கள். நோய்களைத் தீர்க்கும் முறைகள் வெறுமனே மருத்துவப்பாங்கினால் ஆனவை மட்டுமன்று என்பதை விளக்குவதன்முகமாகவும் தனது உடல்வழியான ஒரு மனிதனின் பயணம் எத்தகைய அறம் சார்ந்ததாக இருக்கவேண்டும் என்பதை வடிவமைத்துத்தந்த கடப்பாட்டிலும் இன்றுவரை தமிழ் இனக்குழுவில் ஒரு நிரந்தர சமூகஅங்கம் வகிக்கின்றனர். ஆக, உடலை முதன்மையாக்கும் அதுசார்ந்த சிந்தனைமுறையும் தமிழருடையது.

அதிகாரமிக்கவர்களின் ஆணைக்குரல், நசுக்கப்படுபவர்களின் ஓலத்தை மூடிவிடுகிறது. உடலுழைப்பு, அதிகாரப்பிரயோகங்களுக்கு எதிரானதாக அணுகப்படுகிறது. அதிகாரப்பிரயோகம் உயரஉயர உடலுழைப்பு இல்லாமையையும் தேவைப்படாததையும் ஆதரிக்கிறது. அதிகாரம், சிந்தனைத்தயாரிப்பில் ஈடுபடுவதாகவும் அதற்கான உழைப்பு, உடலுழைப்பினும் தகுதியும் சிறப்பும் மிக்கதாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வெயில், உடலுழைப்பு, கடினஅசைவுகள், கரடுமுரடான நிலபுலப்பணிகளில் ஈடுபடுபவர்கள் இத்தகைய சிந்தனை உற்பத்தியிலும் அனுபவப்பங்களிப்பிலும் ஈடுபடுவதில்லை என்றும், குளீரூட்டப்பட்ட அறை, கணினி இயைந்த அசைவுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மென்மையான உழைப்பை மேற்கொள்பவர்கள் சிந்தனை உற்பத்தியில் பெருவாரியான அளவில் ஈடுபடுகிறார்கள் என்றும் ஒரு தனித்த பொருளாதார சிந்தனைமுறை கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இயங்காத உடலில், உழைப்பின் இயக்கத்துக்குத் தயாராகாத உடலில், சிந்தனை ஊற்றுக்கும் வாய்ப்பே இல்லை. உடலின் இயங்கியல் அத்தகையது. அத்தகைய உடலிலிருந்து அதன் மனோவெளியிலிருந்து கலை, இலக்கிய, நுண்கலை வடிவங்களும் பிறவா.

உழைக்கும் சமூகக்குழுக்கான மருத்துவமுறைகளும் கொள்கைத்திட்டங்களும் அருகிவிட்ட நவீன மாநிலமாகிவிட்டது தமிழகம். நாள்தோறும் உருவாகிவரும் வகைவகையான புதுநோய்களுக்கு எல்லாம் மனிதஇனமும் மருத்துவக்குழுமமும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபடுவதும் அதற்கான தற்காலிக நிவாரண நடவடிக்கைகளைச் செயற்படுத்துவதுமாக இருக்கும் தருணத்தில், பாரம்பரிய மருத்துவமுறைகள் கொண்டிருந்த தர்க்கபூர்வமான உத்தி கணக்கிலும் கருத்திலும் கொள்ளப்படவேண்டியது. உடலின் ‘நோய் எதிர்ப்பு ஆற்றலை’அதிகரித்துக்கொள்வதும் அதற்கான அன்றாட உணவுமுறையையும் வாழ்வியலையும் வடிவமைத்துக்கொள்வதுமே நவீன நோய்களையெல்லாம் எதிர்கொள்ளும் எளிமையான சூத்திரமாக இருக்கமுடியும். நோயை எதிர்க்கும் திறனுடையதாக உடலை வளர்க்க வேண்டுமேயன்றி, தோன்றும் நோய்களை எல்லாம் அவற்றின் பண்பாட்டு அரசியல் காரணிகளை நிவர்த்தி செய்ய முயலாது, உடல்நோயை மட்டுமே களைய முயல்வது அடுத்தவர் புண்ணுக்கு எல்லாம் நாம் மருந்திட்டுக்கொள்ளும் மனநோயில்தான் கொண்டு சேர்க்கும்.
உடலின் உறுப்புகளை இயந்திரத்தின் பல உதிரிப்பாகங்களைப் போலப் பார்க்கும் நவீன மருத்துவமுறை, நவீன வாழ்க்கையின் போலிமையிலிருந்து தனக்கான தத்துவத்தைத் திருடிக்கொண்டதாயிருக்கிறது. உடல்கூறு, உடல்தத்துவம், மனதத்துவம் இவற்றை ஒன்றிணைத்து, உடல்அங்கங்களை ஒன்றோடொன்று உறவுற இணைக்கும் ஓர் உயிரியல் தத்துவமாகவே ஒரு மருத்துவமுறை செயல்படவேண்டும். மேலும், ஒரு குறிப்பிட்ட மனிதஇனக்குழுவின் சமூக, அரசியல், பொருளாதாரச் சூழல்களை உள்வாங்கியதாகவும் அவ்வினக்குழுவின் நாகரிகவளர்ச்சிக்கேற்ற எதிர்கால வாழ்வியலை எதிர்கொள்ளத்தக்கதாயும் இருக்கவேண்டும். பல்வேறு பழங்குடி இனக்குழுக்களின் பாரம்பரிய மருத்துவமுறைகள் சடங்கியல் வழியாக உள்ளோட்டமான மனிதமேம்பாட்டிற்கும் இயற்கையுடன் மனிதனைப் பிணைப்பதாகவும் உள்ளன. அவர்கள் வழங்கும் மருந்துகளும் எதிர்விளைவோ பக்கவிளைவோ இல்லாதவையாகவும் பல தலைமுறைகளின் அனுபவஆய்வுகள் வழியாகப் பெறப்பட்டவையாகவும் இருக்கின்றன. உயிர் காக்கும் பல சஞ்சீவினியாகவோ நோய்தடுக்கும், எதிர்க்கும் ஆற்றல்மிக்கதாகவோ உடலின் இடுக்குகளில் மறைந்திருக்கும் நோய்காரணிகளைக்கூடத் தேடிக்களைவதாகவோ இயங்குகின்றன. நவீன மருத்துவமுறை நோய்க்காரணத்தைக் குறிப்பிட்டு, நோயுற்ற அங்கத்தை உடலின் முழுமையிலிருந்து ஓர் உதிரிப்பாகத்தைப்போல் பிரித்து அணுகும் அல்லது அவசரமாகப் பிரிக்கத் துணியும் ஒன்றாக இருப்பதும் நவீன மருத்துவமுறையினால் எதிர்கொள்ள முடியாத நவீன நோய்வடிவங்கள் பெருகுவதும் மனிதஇனம் நோய்கள் போராக உருவெடுக்கும் பேரபாயத்தை நெருங்கியுள்ளதை உறுதிப்படுத்துகின்றன. ஒரு சிறந்த மருத்துவச்சித்தாந்தம் என்பது மீண்டும்மீண்டும் தன்னை மனிதவாழ்வினோடு நெருக்கமாய் இனங்காணுவதாயும் புத்தாய்வு செய்ய அனுமதிப்பதாயும் நவீன வாழ்விற்குள் நுழைந்து மனிதஉடலின் ஆரோக்கியம் பேணுவதற்கேற்ற புனரமைப்பு செய்வதாயும் இருக்கிறது.

தற்போதைய மனித ஆரோக்கியம் குறித்தான சிந்தனையும் நடவடிக்கைகளும் சுகாதாரம், அழகு என்ற இரண்டை மட்டுமே மேலோட்டமாக வலியுறுத்துவதால், வலிமை, நீண்ட ஆயுள் பற்றிய மதிப்பீடுகள் அற்றுப்போய்விட்டன. சுகாதாரம் என்பது பொருளாதார ஏற்றத்தாழ்வுமிக்க சமூகத்தின் சாதியஅமைப்பில் அடித்தட்டு மக்களுக்கு அவர்கள் வாழ்வியலுக்குப் பொருந்தாத, யதார்த்தத்திற்கு ஒவ்வாத ஒரு நடவடிக்கையாகவே நுகரப்பட வேண்டும். அழகின் அளவுகோல்கள் ஒப்பனையையும் சலிப்பூட்டும் ஒரேபடித்தான மனிதஉடல் வடிவமைப்பையும் முன்னிறுத்துவதாக இருக்கின்றன. இவை இரண்டிலுமே மனித மனஅவசமும், இயற்கையின் கூறாக மனிதஇயக்கமுமே மதிக்கப்படுவதில்லை.
வலிமைக்கும் நீண்ட ஆயுளுக்கும் மனிதன் வாழும் சூழலும், மேற்கொண்ட வாழ்க்கைமுறையும் சார்ந்த உணவுமுறையும் பழக்கவழக்கங்களம் தேவைப்படுகின்றன. இயற்கையின் பருவகால மாறுதல், மரங்களின் மீது செயல்படுத்தும் ஆதிக்கத்தைப் போலவேதான் மனிதன் மீதும் செலுத்துகின்றன. அதற்கேற்ற உணவுச்செயல்பாடு நோய்த்தன்மைக்கு உடல் ஆளாகாமல் காப்பதோடு, கடுமையான பருவங்களை எதிர்கொண்டு நீள்வாழ்வு காணும் வலிமைமிக்கதாயும் மனிதஉடலைக் காக்கிறது. மனிதஉடலில் பருவத்தின் தடங்கள் அன்றாடத்தன்மை உடையது. ஆகவே அன்றாட உணவுப்பழக்கமும் அதை அனுசரிக்கத்தக்கதாயும் பருவமாறுதலைப் புரிந்துகொண்டதாயும் இருக்கவேண்டும்.

தமிழகத்தில் பெண்களின் ஆரோக்கியமும் அதற்காக அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் இன்றைய அரசியல்சூழல் ஏற்படுத்தித்தந்த அதிகாரஅமைப்பு, மருத்துவவசதிகள், ஆலோசனைகளுக்கு ஒப்புக்கொடுத்தவையாக இருக்கின்றன. தன் உடல்ஆரோக்கியம் பேணுவதும் மருத்துவஉரிமைகளைப் பெறுவதும் பெரிய சவாலாகவும் போராட்டமாகவும் இருக்கின்றன. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் அறுவைப்பிரசவம் செய்துகொள்ளும் பெண்கள் இரண்டு விழுக்காடாக இருக்கையில் தமிழகத்தில் இவ்விழுக்காடோ அறுபது ஆக இருக்கிறது. இது மருத்துவஅறம் மீறிய நிலையாகவும் இயற்கையானதொரு மனித உடல்நிகழ்வு, நோயாக அணுகப்படுவதாகவும் பெண்களின் நீள்வாழ்வைக் குறைப்பதாகவும் உள்ளது. பெண்களின் வாழ்வுயிர் குறித்த வெகுசனமதிப்பையே இது காட்டுகிறது. பிரசவம் மருத்துவர்களால் அதிகப் பொறுமை கோரும் ஒரு கலையாக அணுகப்படாது, வியாபார உத்திகளோடும் அறிவியல் தொழில்நுட்பத்தை செயல்படுத்துபவர்களாக முன்னிலைப்படுத்தும் பெருமிதத்தோடும் மட்டுமே பார்க்கப்படுகிறது.

நமது பண்பாட்டுஅரசியல் பெண்கள் மீது திணிக்கும் மூடநம்பிக்கைகளும் பிற்போக்குக்கருத்துக்களும் ஒடுக்குமுறைவடிவங்களும் அவர்களைத் தமது உடல்பிரச்சனைகள், நோய்கள் எழுப்பும் அடையாளங்கள் குறித்து நெருங்கிய உறவுப்பெண்களுடனோ தோழிகளுடனோ கூட எந்த உரையாடலையும் ஏற்படுத்த இயலாத இறுக்கத்தையும் தயக்கங்களையும் எச்சரிக்கைகளையும் கொண்டுள்ளன. இவ்வகையில் தமிழகத்தில் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் ஒரு கொள்ளைநோயைப்போல உருவெடுத்துள்ளது ஓர் அபாயச்சங்கொலியாகும். மேலைநாட்டு மருத்துவத் திட்டங்கள், எல்லோரையும் முறையாக ஆண்டுதோறும் பரிசோதித்து, புற்றுநோயினை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்துவதன்வழி புற்றுநோயினால் ஏற்படும் பெருவாரியான இறப்புவிகிதத்தைக் குறைத்துள்ளன. நமது சமூகச்சூழலோ புற்றுநோய் என்றாலே மரணம் நிச்சயம் எனும் அளவுக்கு அதுபற்றிய விழிப்புணர்வை மக்கள் பெற இயலாததாகவும் மருத்துவப் பரிசோதனைமுறைகள் ஏழைமக்களின் கைகளுக்குக் கிட்டாதவையாகவும் அரசு கீழ்த்தட்டு மக்களுக்கு அவற்றை வழங்குவதில் காட்டும் மெத்தனமும் கொடியவறுமையும் நோயை வெல்ல முடியாததாக்குகிறது. பெண்களின் பண்பாட்டுச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் அரசுஇயந்திரம், அவர்களின் ஆரோக்கியம் குறித்தான தனது கொள்கைத்திட்டங்களிலும் பிற்போக்காகவே இருக்கிறது.

சமூகமாற்றத்திற்கான சிந்தனையையும் செயல்பாட்டையும் வகுக்கும், பொறுப்பேற்கும் மனிதக்குழுமம் உடல், மனஆரோக்கியம் மிக்கதாகவும் இருக்கவேண்டியதிருக்கிறது. நவீனம் மனிதஉடலைப் பீடித்ததன் வழியே சிந்தனையையும் பற்றிக்கொண்டது. மருத்துவக்கோட்பாடுகளை வாழ்வியலிலிருந்து பிரித்து அணுகும் ஒரு மனிதச்சமூகம், கற்கால மனிதனையே பிரசவிப்பதாக எண்ணவேண்டும். ஏனெனில் ஒவ்வொரு தனித்த மனிதஉடலும் கூட ஓர் அரசியல் பிரதியே.


-குட்டி ரேவதி