>

Monday, June 1, 2009

கமலா சுரையா – உடலுக்குள் ஆயுதம்



ஓர் ஆவணப்படத்திற்காக கமலா சுரையா அவர்களை சில தோழிகளுடன் சந்திக்கச் சென்றிருந்தேன். மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட அவருடைய படைப்புகளைப் படித்திருந்தேன். மூத்த படைப்பாளர்களைச் சந்திக்கும்போது ஏற்படும் ஏமாற்றங்கள் நமக்கே அவமானம் தருபவை. நாமும் அந்த வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதால். அந்த ஏமாற்றம் எனக்கு கமலாதாஸிடம் ஏற்படவேயில்லை. படைப்பாளிகளை நாம் அவர்கள் படைப்புகள் வழியாகவே அறிகிறோம். அப்பொழுதைய எனது எதிர்பார்ப்பைவிட அவர் அளப்பரிய ஆற்றலுடனும் பெருந்தன்மையுடனும் இருந்தார். ஆனால் தம்மை முழுமையான ஓர் மனித உயிரியாகவும் சுயதணிக்கையற்று எழுதும் படைப்பாளியாகவும் உணரும் பெண் எழுத்தாளர்கள் கடுமையாக விமர்சிக்கப்படும் நாடு இது என்பதால் கமலாதாஸும் இதற்குத் தப்பிக்கவில்லை.

அவர் தன்னை வாழ்க்கையின் விளையாட்டுக்கு முழுமையாக ஒப்புக்கொடுத்தவர் என்பதால் அவரைப்பார்த்து விமர்சித்தவர்களையெல்லாம் அவர் எளிதாகப் புறம்தள்ள முடிந்தது. அவருக்கு, அவரின் எழுத்தும் பரீட்சார்த்தங்களும் அழைத்துச்சென்ற வெளியை இன்னொரு பெண், விடுதலையுணர்வை நுகராத பெண் அனுபவிக்க முடியுமா என்பது கேள்வியே. சுயம் குறித்த கேள்விகள் அவருக்குத்தன் இருப்பு சார்ந்து எழுந்துகொண்டேயிருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் தனது வாழ்க்கையை இவ்வளவு பரிசோதனைகளுக்கு உட்படுத்தியிருக்க முடியாது. அவரின் மதமாற்றம் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் மதம் என்பது பெண்ணுக்கு எத்தகைய ஓர் உளவியல் சுமை என்பதை உணர அவர் எடுத்துக்கொண்ட பிரயத்தனமே அது. மேலும் அதன் வழியாக தன்னை, தனது அடையாளத்தை நிறுவுவதற்காக தொடர்ந்து ஆய்வு செய்துகொண்டேயிருந்தார். இந்தியாவை தனது நாடு என்று கொண்டாடுவோருக்கும் தான் ஒழுகி வந்த இந்து மதத்திலிருந்து ஒரு பெண் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்கும் தேவைப்படுவது ஒரே விதமான அரசியல் புரிதலே. மதம் என்பது உடலுக்குள் ஆயுதத்தை ஒளித்து வைத்துக்கொள்வது போன்றது.

தானே தன்னளவில் ஓர் இயக்கவாதியாக இருந்து காதல் என்பதன் அப்பழுக்கற்ற வெளிக்குப் பயணப்படத் துணிந்தார். மதத்திற்கும் பெண்ணுக்குமிடையிலான குறுகலான உறவுகளை முறியடிக்க விழைந்தார். ஆண்களின் சுயம் குறித்த அதிகார விழைவைப்போல பெண்ணின் சுயம் என்பதை அடையாளப்படுத்தும் முனைப்பை அவர் வாழ்க்கை முழுதுமாகக் கொண்டு, ஆனால் ஆண்கள் கையாளும் அந்த அதிகார வெறியைக் கையாள முடியாமல் சுயம் பற்றிய எள்ளலான ஓர் அபிப்ராயத்தை எல்லோருக்கும் கொடுத்தார். மற்ற படைப்பாளிகளைப் போல அவர் எதையுமே கடைசிவரை கற்பிக்கவோ வகுப்பெடுக்கவோ விரும்பவில்லை. மாறாக சுயக்கண்டுபிடிப்புகளுக்குக் கூட்டிச்செல்லும் பாதையாகவே எழுத்தை வைத்துக்கொண்டார்.

தனது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு நிலையில்லாமையைக் கொண்டிருந்தார். அது அவர் தன்னை எந்தச் சட்டகத்துக்குள்ளும் திணித்துக்கொள்ள முயலாமல் ஒரு பறவையாக இருக்க முயன்றதன் வெளிப்பாடே. பெண் உடலின் மீதான சமூக வெறுப்பைக் கொண்டாட்டமாகவும் அதே சமயம் அதை ஓர் எதிர்ப்பாகவும் மாற்றத்தெரிந்தவர். இந்தியப் பெண் படைப்பாளிகளுக்கு அவர் திறந்து கொடுத்த படைப்பு வெளிகள் பண்பாடும் அரசியல் துலக்கங்களும் உடையவை. முழுமையான ஒரு பெண்ணாகத் தன்னை அடையாளம் காண்பதில் அவர் கொண்ட களிப்பும் வெறியும் இலக்கில்லாததாக அவரை வைத்திருந்தது.

அன்றும் இன்றும் அவர் அனுபவித்தக் களிப்பைப் பார்த்துப் பொறாமை கொண்ட ஆண் படைப்பாளிகள் உண்டு. ஏற்கெனவே ஆயத்த வடிவில் இருக்கும் உலகம் ஆண்களுக்கானது என்பதை உணர்ந்திருக்க கமலா சுரையா உணர்ந்திருக்க வேண்டும். இல்லையென்றால் தான் வாழ்வதற்குத் தேவையான ஓர் உலகை தானே உருவாக்கிக்கொள்ள இவ்விதம் துணிந்திருக்கவே மாட்டார்.

குட்டி ரேவதி

No comments:

Post a Comment