>

Tuesday, May 5, 2009

வெகுமானம்

கவிதை எழுதுவதற்கும் அதை ஒரு தொடர் இலக்கியப்பயணமாக மாற்றிக்கொள்வதற்கும் பல தருணங்களில் எனக்கு உறுதுணையாக இருந்தது புஷ்கினின் ஒரு கவிதைப்பத்தி தான். தமிழகச்சூழலில் கவிஞர், அதிலும் ஒரு நவீனக் கவிஞர் எனப்படுபவர் பல தளங்களில் தன்னை தனது ஆளுமையை நிறுவ போராடவும் தொடர்ந்து உழைக்கவும் வேண்டியிருக்கிறது. அத்தகையதோர் இலக்கிய அரசியல் கட்டுமானம் தமிழகத்தில் நிலவிக்கொண்டிருக்கிறது. புஷ்கினின் வரிகள் இந்த அரசியலை எவ்வாறு தனி மனித அளவில் எதிர்கொள்ள வேண்டும் எனும் அறச்செயல்பாட்டை விளக்குவதாக உணர்கிறேன்.
”நீ ஒரு அரசன். தனிமையில் வாழ்ந்திரு
சுதந்திரமான பாதையில்
உனது தளையற்ற மனம்
எங்கே அழைத்துப்போகிறதோ அதைத் தொடர்ந்து போ
நேசிக்கப்பட்ட சிந்தனையின் கனிகளைக் கனியவிடு
நிறைவேற்றிய உன்னதச்செயல்களுக்கு வெகுமானம் கேட்காதே
வெகுமானங்கள் உன்னிடமே இருப்பவை
நீயே உனது உன்னத நீதிபதி
எவரும் துல்லியமாக உன் படைப்பைத் தீர்ப்பிடார் ஒருபோதும்
நுட்பமான கலைஞனே! உனக்கு அது சந்தோஷம்தானா?” எனும் புஷ்கினின் வரிகள் இன்று வரை என் கவிதை நெஞ்சிற்கு உரமாகவும் வெளிச்சமாகவும் இருந்து வருகின்றன. இவ்வரிகளை பத்து வருடங்களுக்கு முன்பு காஞ்சனை திரைப்பட இயக்கம் தனது ஓவியம் குறித்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் ஒன்றில் அச்சிட்டிருந்தது. இன்றும் இறைச்சிப் பொருளாய் உள்ளிறங்கி எனது நாடி நரம்புகளில் எல்லாம் ஊடுருவி ஒரு பாய்ச்சலையும் துணிவையும் தந்து கொண்டேயிருக்கின்றன அவ்வரிகள்.
தமிழ்ச்சூழல் முன்பினும் அதிகமாய் குழு மயமாகவும் கருத்தியல் வலு இழந்தும் போய்விட்டதை என்னால் நன்கு உணரமுடிகிறது. பத்து வருடங்களுக்கு முன்பாக கவிதைக்கும் எழுத்துக்கும் எழுத்தாளர்க்கும் இருந்த மரியாதையைக் கூட இப்பொழுது உணரமுடியவில்லை. எல்லா படைப்பாளிகளும் வாழ்வியல் போராட்டத்தை எதிர்கொள்ளும் துணிவையிழந்து கொண்டிருக்கின்றனர். இளம் படைப்பாளிகளுக்கு வழங்க இவர்களிடமோ இவர்களின் படைப்புகளிலோ ஒன்றுமில்லாமல் போய் ஒரு வெக்கை எங்கெங்கும் பரவியிருக்கிறது. தன்னை முன்னிறுத்தும் போரில் ஒருவரையொருவர் காலையிழுத்து வீழ்ந்து நகைக்க வைக்கும் நிகழ்வுகளுடன் தாம் வாழ்ந்தும் எழுதியும் கொண்டிருக்கும் மூத்த படிப்பாளிகள் நினைவில் உலவுகின்றனர். தமிழக அரசியல் திருப்பங்களை விட இலக்கியத்தளம் பல அதிர்ச்சியான திருப்புமுனைகளையும் வீழ்ச்சியையும் கண்டுள்ளதை எந்த ஒரு நேர்மையான அவதானிப்பும் சமூக அக்கறை உள்ள படைப்பாளியும் கண்டுகொள்ள முடியும்.
எந்த கருத்தியல் மலர்ச்சியும் சமீபத்தில் நிகழவில்லை. ஏற்கெனவே பொங்கியெழுந்த பெண்ணியத்தின் உடலரசியல் கருத்தியலும் தலித் பெண்ணியமும் அவற்றை விவாதித்து சிந்தனைத்தளத்தை விரிவுபடுத்தும் காழ்ப்புணர்வற்ற இலக்கிய விமர்சகர்களின்றி தேங்கிப்போய்விட்டது. எந்த ஒரு தீர்க்கமான பாதையும் அற்று பெண்ணியம் தடுமாறுவதை பெண்ணியவாதிகள் எனப்படுவோர் வேடிக்கைப்பார்த்து இருப்பதுடன் தாம் ஏற்கெனவே நிறுவிக்கொண்ட பெண்ணிய கொட்டிலுக்குத்தீனி போடுவதில் மும்முரமாக இருக்கின்றனர். அந்த வகையில் பெண்ணியம் என்பது குருடன் தடவிப்பார்த்து வருணித்த யானையைப்போலவே பிரமாண்டம் எடுத்துள்ளது.
இலக்கிய உலகின் நம்பகங்கள் பொய்யாகும் போதும், எழுத்துப்பயணத்தில் இடர்களைச் சந்திக்கும் போதும், நாம் விதந்தோதும் இலக்கிய ஆளுமைகள் அறம் மீறி அதிகாரத்தை நோக்கியும், அங்கீகாரத்தின் பொருட்டும் பயணப்படும்போதும் மேற்குறிப்பிட்ட புஷ்கினின் வரிகள் இருட்டில் விளக்குக்கம்பங்களாக உயர்ந்து நின்று வழிகாட்டிக்கொண்டேயிருக்கின்றன. இன்னும் இன்னும் அவற்றில் ஊற்றெடுக்கும் அறச்சிந்தனைகள் என்பவையும், அவ்வரிகளைக் கைகளில் கொண்டு பயணத்தைத்தொடரும் படைப்பாளி சந்திக்கும் தருணங்களையும் அவர் சேகரிக்கும் அனுபவங்களையும் பொறுத்தது. அங்கீகாரம் தேடும் கலைஞன் ஒருவன் எத்தகையதோர் அங்கீகாரத்தை அவன் ஏற்கவேண்டும் என்ற தெளிவையும் அதற்கான துணிவையும் வழங்குகிறது. இந்தக்குறிப்பிட்ட தருணத்தில் ’வெகுமானங்கள் உன்னிடமே இருப்பவை’ எனும் வரி எத்தகையதோர் இருளழிந்த பாதையை திறந்து கொடுக்கின்றது.
-குட்டி ரேவதி

1 comment:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

//”நீ ஒரு அரசன். தனிமையில் வாழ்ந்திரு
சுதந்திரமான பாதையில்
உனது தளையற்ற மனம்
எங்கே அழைத்துப்போகிறதோ அதைத் தொடர்ந்து போ
நேசிக்கப்பட்ட சிந்தனையின் கனிகளைக் கனியவிடு
நிறைவேற்றிய உன்னதச்செயல்களுக்கு வெகுமானம் கேட்காதே
வெகுமானங்கள் உன்னிடமே இருப்பவை
நீயே உனது உன்னத நீதிபதி
எவரும் துல்லியமாக உன் படைப்பைத் தீர்ப்பிடார் ஒருபோதும்
நுட்பமான கலைஞனே! உனக்கு அது சந்தோஷம்தானா?”//

எத்தனை சத்தியமான வரிகள்! அடையாளம் தேடும் படைப்பாளி ஒவ்வொருவனும் உணர வேண்டிய சிந்தனை. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

Post a Comment